யுத்த இடம்பெயர் மக்களை விடுதலை செய்யுமாறு அமெரிக்க பாராளுமன்றம் இலங்கைக்கு அழுத்தம்
-
இவ் விடயம் 05. 11. 2009, (புதன்),
தமிழீழ நேரம் 19:30க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், வெகு விரைவில் விடுதலை செய்ய வேண்டும் எனவும் அமெரிக்க பாராளுமன்றம் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.
இடம்பெயர் முகாம்களில் அவலங்களை எதிர்நோக்கி வரும் அப்பாவி பொதுமக்கள் விரைவில் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல இலங்கை அரசாங்கம் ஆவண செய்ய வேண்டுமென அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை இடம்பெயர் மக்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனைத் திட்டம் 421 – 1 என்ற அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இடம்பெயர் மக்களுக்கு சேவையாற்றக் கூடிய தொண்டு நிறுவனங்கள், குறிப்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களுக்கு வரையறையற்ற அனுமதி வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அகதி முகாம் நிலவரம் பற்றி சுயாதீனமான மதிப்பீடு ஒன்றை நடாத்த அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் இயல்பு நிலையை ஏற்படுத்தும் வரையில் தமிழ் மக்கள் பொறுமையுடன் செயற்பட வேண்டுமென அமெரிக்க பாராளுமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையிலான அரசியல் தீர்வுத் திட்டமொன்று நோக்கிய நகர்வுகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.