மகிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிப்பதற்காகவே ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர்
-
இவ் விடயம் 25. 11. 2009, (புதன்),
தமிழீழ நேரம் 14:15க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்குவதாகவும், அவர்கள் மக்கள் நலன் கருதி பொது வேட்பாளரை களமிறக்கவில்லை எனவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். இவ்வாறான குறுகிய நோக்கங்களுக்காக களமிறக்கப்படும் வேட்பாளரை, குறுகிய நோக்கம் கொண்ட வேட்பாளராக அரசாங்கம் அடையாளப்படுத்துவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எந்த வேட்பாளரைக் களமிறக்கியேனும் ஜனாதிபதித் தேர்தலில் முடிந்தால் வெற்றிபெற்று காட்டுமாறு அரசாங்கம் எதிர்க்கட்சிக்கு சவால் விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பெரும் தலைவர்களைக் கொண்டிருந்த இலங்கையின் பிரபல அரசியல் கட்சியொன்று தற்போது ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியாத நிலைக்குச் சென்றுள்ளது. இது கவலைக்குரிய விடயம் எனவும் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.