நளினி விடுதலையை பாதிக்கும் தீர்ப்பு
-
இவ் விடயம் 15. 12. 2009, (திங்கள்),
தமிழீழ நேரம் 5:20க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
கொலைக் குற்றத்திற்கு நீதிமன்றம் விதிக்கும் ஆயுள் தண்டனை குறைந்தது 14 ஆண்டுகள் என்பதே சரி என்றும், 14 ஆண்டுகள் சிறையில் இருந்த கைதி தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோருவதற்கு எந்த உரிமையும் இல்லை என்றும் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராம்ராஜ் என்ற கைதி, தான் சிறையில் 14 ஆண்டுகள் கழித்துவிட்ட காரணத்தினால் தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரி செய்த மேல் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அல்டாமாஸ் கபீர், சிரியாக் ஜோசஃப் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு, கொலைக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதி, 14 ஆண்டுகள் ஆன பின்பு தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோருவதற்கு உரிமை ஏதுமில்லை என்று கூறியுள்ளது.
தனக்கு விடுதலை கோரி மேல் முறையீடு செய்த ராம்ராஜ் குறைந்தது 20 ஆண்டுக்காலம் சிறையில் இருக்க வேண்டும் எனபதை உறுதி செய்யுமாறு சட்டீஸ்கார் அரசைக் கேட்டுக் கொண்ட நீதிமன்றக் குழு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி குறைந்தது 14 ஆண்டுகளாகவது சிறையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
“மகாத்மா காந்தி கொலை வழக்கில் கோபால் கோட்சேவுக்கு (நாதுராம் கோட்சேயின் இளைய சகோதரர்) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதில் இருந்து பல வழக்களில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை என்பது குற்றவாளியின் ஆயுள் முழுமைக்குமான தண்டனை என்றே பொருளாகும்.
ஆயினும் நன்னடத்தை காரணமாக ஆயுள் தண்டனைக் காலம் குறைக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்துள்ள இன்றையத் தீர்ப்பு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி உள்ளிட்டவர்களின் விடுதலை கோரிக்கையை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.