திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறப்பும் அறம் சார்ந்த கேள்விகளும்!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தந்தையார் சிறிலங்கா படைகளின் தடுப்புக் காவலில் இருந்த போது கடந்த புதன்கிழமை இரவு [06 ஜனவரி, 2009] இறந்துவிட்டார்.

இந்தத் தகவலை சிறிலங்கா படைகளின் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார வெளியிட்டுள்ளார்.

86 வயது முதியவரான திருவேங்கடம் வேலுப்பிள்ளையும் அவரது துணைவியாரும் – வன்னிப் போரின் இறுதியில் – முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து சிறிலங்காப் படையினரால் பிடிக்கப்பட்டனர்.

கடந்த 2009 மே 16 ஆம் நாள் முதல் – வெளிச் சொல்லப்படாத மறைவிடமொன்றில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

86 வயதான அந்த முதியவர் படைத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்பதும், அங்கேயே இறந்து போனார் என்பதும் அறம் பற்றிய பல கேள்விகளை எழுப்புகின்றது.

இவரைப் போன்றே தடுப்பு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு ஏற்கனவே இறந்து போன பல முதியோரினதும் நினைவுகளுடன் இந்த அறம்சார் கேள்விகள் உரத்து எழுகின்றன.

“பயங்ரவாதி” என்று சிறிலங்காவால் சொல்லப்பட்ட பிரபாகரனின் பெற்றோராக இருந்ததும், விடுதலைப் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பில் வாழ்ந்தார்கள் என்பதையும் தவிர அவரும் அவரது துணைவியாரும் – வேறு எந்த வகையிலும் அந்த 400,000 மக்களில் இருந்து வேறுபட்டவர்கள் அல்லர்.

இருந்த போதும் – மற்றவர்களில் இருந்து பிரிக்கப்பட்டு – தனியாக அவர்கள் படைத் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதற்கு என்ன நியாயங்கள் இருந்தன?

அதற்கும் மேலாக – அறுபது வயதுக்கும் மேற்பட்டவர்கள் தமது உறவினர்களுடன் செல்ல அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டு – அவ்வாறானவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தும் கூட – வேலுப்பிள்ளை தம்பதியர் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தது ஏன்?

அல்லது – தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 124,000 பேர் வரையி்ல் தமது வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தும் கூட – எண்பது வயதைத் தாண்டிய நோயாளிகளான அந்த முதியவருக்கும் அவரது துணைவிக்கும் – பிரபாகரனைத் தவிர்த்து வேறு பிள்ளைகள் இருந்தும் கூட – அவர்களிடம் சென்று சேர்ந்து வாழ வழியமைத்துக் கொடுக்கப்படாதது ஏன்?

விடுதலைப் புலிகளின் பல முதன்மை உறுப்பினர்களின் குடும்பத்தினர் கூட இவ்வாறு தமது வீடுகளுக்குச் சென்று வாழ அனுமதிக்கப்பட்டுவிட்டார்கள்; ஆனால், இந்த வயோதிபர்கள் மட்டும் தனியாகப் பிரிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டது ஏன்?

இவர்களைப் போன்றே பல்வேறு விடுதலைப் புலிப் போராளிகளின் குடும்பத்தினரும் கூட (துணைவியரும் – குழந்தைகளும்) தடுப்புக் காவில் இன்னும் வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான அனைத்துலக நீதி நியமங்கள் என்ன?

இந்தப் பெற்றோரும், குடும்பத்தினரும், மனைவியரும், குழந்தைகளும் இழைத்த குற்றங்கள் என்ன?

இவை எத்தகைய நியாய விழுமியங்களுக்கு உட்பட்டது?

குற்றம் சாட்டப்பட்ட ஒருவரைக் கொல்லுதல் அல்லது தடுத்து வைத்தல் என்பவற்றுக்கு அப்பால் – அவர் இழைத்ததாகக் கருதப்படும் குற்றங்களுக்காக அவரது குடும்பத்தையும் தண்டித்தல் என்பது எவ்வகையி்ல் நீதியானது?

இது எல்லாமே, குறிப்பாக வேலுப்பிள்ளை குடும்பத்தினர் தடுத்து வைக்கப்பட்டது – ஒரு வகையில் ‘வன்மம் தீர்த்தல்’ என்பதைத் தவிர வேறெதுவுமே இல்லைத்தானே?

அறத்தின் அடிப்படையிலான இந்தக் கேள்விகளை சிறிலங்கா அரசுத் தரப்பிடம் கேட்பதில் எந்தப் பொருளும் இல்லை.

ஆனால் – மாற்று அரசியலாளர்கள், மதங்களின் வழியான அறங்களை பேசுவோர், மதங்கள் முன்வைக்கும் வாழ்வு நெறிகளைப் போதிப்போர், அவற்றைக் கடைப்பிடிப்போர், மனித உரிமையாளர்கள், மனிதார்ந்த ஆர்வலர்கள் என அறியப்பட்டோர் என அனைவரையும் நோக்கி் இந்தக் கேள்விகளை நாம் எழுப்ப வேண்டியுள்ளது.

குறிப்பாக – பெளத்த வாழ்வியல் போதனைகளைப் பின்பற்றும் ஒரு இனத்திற்குள் – பெற்றோரை வணங்குதல், பெரிவர்களிடம் ஆசிபெறுதல் போன்றதான பெளத்த அறங்கள் தொடர்ந்தும் சீரழிந்து வருவதையே – திருவேங்கடம் வேலுப்பிள்ளை போன்ற நூற்றுக்கணக்கான முதியோரின் இறப்புக்கள் உணர்த்துகின்றன.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.