சரத் பொன்சேகாவுடன் எவ்வித இரகசிய ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் எவ்வித இரசிய ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது.
 
ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர் மக்களுக்கு பிழையான தகவல்களை வெளியிட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்னசிங்கம் தெரிவித்துள்ளார்.

இனவாதத்தை பயன்படுத்தி தெற்கில் குறுகிய அரசியல் லாபங்களை அடையும் நோக்கில் சிலர் உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
சரத் பொன்சேகாவுடன் எவ்வித உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை எனவும், ஓர் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
எவ்வாறெனினும், தமிழர் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமொன்றை ஜெனரல் சரத் பொன்சேகா முன்வைத்தாரா என்பது குறித்து அவர் எவ்வித கருத்தினையும் வெளியிடவில்லை.
 
ஜெனரல் சரத் பொன்சேகாவினால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டங்கள் எதுவும் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானிப்பதற்கு முன்னர் ஜனாதிபதி மற்றும் அவருடைய பிரதிநிதிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக அவர் துரைரட்னசிங்கம் தெரிவித்துள்ளார்.
 
இந்த அரசாங்கத்தின் கடந்த நான்கு வருட ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை  வடக்கு கிழக்கை மீள இணைத்தல், அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல் மற்றும் விடுதலைப் புலி சந்தேக நபர்களை விடுதலை செய்தல் போன்ற கோரிக்கைகளுக்கு ஜெனரல் பொன்சேகா இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசாங்கத் தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் பற்றிய உங்கள் கருத்தை எழுதுங்கள்

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.