ஜனாதிபதியுடன் பகிரங்க விவாதம் நடத்தத் தயார் என சரத் பொன்சேகா மீண்டும் அறிவிப்பு
-
இவ் விடயம் 11. 01. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 1:22க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பகிரங்க விவாதமொன்றை நடாத்தத் தயார் என எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா மீண்டும் அறிவித்துள்ளதாக ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஆயுதக் கொடுக்கல் வாங்கல்கள் விவகாரம் தொடர்பில் பகிரங்க விவாதமொன்றை நடத்த தமது ஜனாதிபதி வேட்பாளர் தயார் என ஜே.வி.பி. சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டின் இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகிய அதி உயர் பொறுப்புக்களை வகித்த இந்த இரண்டு பேருமே ஆயுத விவகாரம் தொடர்பில் பேசுவதற்கு தகுதியானவர்கள் என ஜே.வி.பி கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தமக்கோ, சவால்களை விடுக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கோ இந்த ஆயுதக் கொடுக்கல் வாங்கல்கள் பற்றி தெளிவாக தெரிந்திருக்க நியாயமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஆயுதக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விவாதமொன்றை நடத்தக் கூடிய மிகத் தகுதியானவர்கள் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியும், முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் சரத் பொன்சேகாவுமே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.