தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க தயார்: ஆனால் அரசமைப்பு திருத்தமும் சர்வஜனவாக்கெடுப்பும் அவசியம் என்கிறார் மகிந்த

அதிகாரப்பரவலாக்கத்தின் ஊடாக சிறுபான்மை தமிழ் மக்களுக்கு சுயாட்சி வழங்குவதற்கு தான் தயார் என்று கூறியுள்ள சிறிலங்கா அரசதலைவர் மகிந்த ராஜபக்ச, தனது இந்த திட்டத்துக்கு நாடாளுமன்ற அங்கீகாரமும் சர்வஜன வாக்கெடுப்பும் தேவை என்று தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை அரசதலைவர் செயலகத்தில் வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்து பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் -  போரின் முடிவு சிறிலங்காவில் பிரச்சினையின் முடிவு என்று அர்த்தமாகாது. சிறிலங்காவில் சாதாரண மக்களுக்கு இன்று சமாதானமே தேவை. ஆனாலும் அரசியல் தீர்வுக்கான தேவை வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கு முன்பு வழங்கப்பட்ட அதிகாரங்களை விட கூடுதல் அதிகாரங்கள் கொண்ட சுயாட்டி கட்டமைப்பபொன்றை வழங்கி அவர்களின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்கு நான் தயார். ஆனால், அரசமைப்பு திருத்தப்படவேண்டும். அவ்வாறு திருத்தம் கொண்டுவருவதற்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. அத்துடன், இவ்வாறான ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதாயின் உத்தேச தீர்வு குறித்து சர்வஜனவாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.

நாடாளுமன்றில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு அங்கு இரண்டாவது சட்டவாக்க சபை ஒன்றை உருவாக்கி, அதில் தமிழ் பிரதிநிதிகளை பெரும்பான்மையாக உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், என்று கூறியுள்ளார்.

இவ்விடயம் பற்றிய உங்கள் கருத்தை எழுதுங்கள்

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.