வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தின் ஒரு பகுதியில் மீள்குடியமர்வுக்கு அனுமதி
-
இவ் விடயம் 13. 01. 2010, (திங்கள்),
தமிழீழ நேரம் 19:43க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
1990ஆம் ஆண்டுமுதல் மக்கள் பாவனக்குத் தடுக்கப்பட்டு உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்த யாழ்ப்பாணம் வலி . வடக்குப் பகுதியில் கணிசமான பிரதேசத்தில் நேற்றுமுதல் மீளக்குடியமர்வுக்குப் பூர்வாங்க அனுமதி வழங்கப்பட்டது. தெல்லிப்பழையில் இருந்து மாவிட்டபுரம் வரை கே.கே.எஸ். வீதியின் மேற்குப்புறமாகவுள்ள இடங்களில் மீள்குடியமர்வதற்கே அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
வலி. வடக்கு மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கையை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கே.என். டக் ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி ஆகியோர் இணைந்து மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆயத்தில் பூசை வழிபாடுகளுடன் நேற்று ஆரம்பித்து வைத்தனர்.
நேற்று முற்பகல் 11 மணியளவில் அவர்கள் தெல்லிப்பழைப் பிரதேச செயலர் அலுவலகத்தில் வலி .வடக்கு மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர். பின்னர் அவர்கள் வலி . வடக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேருடன் தெல்லிப் பழைப் பிரதேச செயலகத்தில் இருந்து நடந்து மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத் திற்குச் சென்று அங்கு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
பூஜை வழிபாடுகளுக்கு முன்னர் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வளாகத்தில் வைத்து பொதுமக்களுக்கு மீள்குடியேற்றம் தொடர்பான அறிவித்தலை அமைச்சர் டக்ளஸ் வெளியிட்டார்.
அவர் அங்கு வைத்து தெரிவித்த விவரங்கள் வருமாறு:
இன்று (புதன்கிழமை) முதல் பொதுமக்கள் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் வரைக்கும் அத்துடன் அங்கிருந்து மேற்கே கீரிமலை, சேந்தாங்குளம் ஆகிய பகுதிகளுக்கும் எந்தவித இராணுவ சோதனைகளுமின்றித் தமது சொந்த வாகனத்தில் சென்று தமது இடங்களைப் பார்வையிடலாம். இன்னும் மூன்று நாள்களில் தமது சொந்த வீடுகளுக்குச் சென்று துப்புரவுப் பணிகளில் அவர்கள் ஈடுபடுவதற்கான அனுமதிகயைப் பெற்றுத்தருவேன்.
இத்தகைய மீள்குடியேற்றம் முதற்கட்ட நடவடிக்கை. அடுத்த கட்டம் விரைவில் வலி.வடக்கின் ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படும். அதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளேன் என்றார். இளவாலை வடமேற்கு, இளவாலை வடக்கின் மற்றுமொரு பகுதி, வித்தகபுரம், பன்னாலையின் மற்றுமொரு பகுதி, கொல்லங்கலட்டி, கீரிமலை, மாவிட்டபுரம் வடக்கு, மாவிட்டபுரம் தெற்கு, தெல்லிப்பளை, பளை வீமன்காமம் வடக்கு, பளை வீமன்காமம் தெற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் முதற்கட்டமாக மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.