சிறீலங்காவில் நடைபெறும் வன்முறைகளுக்கு மகிந்தவும், காவல்துறை மாஅதிபருமே பொறுப்பு: ஆசிய மனித உரிமைகள் அமைப்பு

சிறீலங்காவில் மோசமடைந்துள்ள தேர்தல் வன்முறைகளை நிறுத்துவதற்கு அனைத்துலக சமூகமும் சிறீலங்காவும் உடனடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இந்த வன்முறைகளுக்கு அரச தலைவரும், காவல்துறை மாஅதிபருமே பொறுப்பு என ஆசிய மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அது தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்காவில் அரச தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு வன்முறைகள் உக்கிரமடைந்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இது நிலமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரின் ஆதரவாளர்கள் சென்ற பேரூந்து மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் முன்னர் சிறீலங்காவில் நடைபெற்ற தாக்குதல்களை போல நன்கு திட்டமிடப்பட்டவை.

காவல்துறை பாதுகாப்புக்களை உரியமுறையில் வழங்கத் தவறுவதே வன்முறைகளுக்கான பிரதான காரணம். சிறீலங்காவின் பிரதம காவல்துறை அதிகாரி மகிந்த ராஜபக்சாவை ஆதரிப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளது காவல்துறையினரிடம் எதிர்மறையான நடவடிக்கைகளை தோற்றுவித்தள்ளது. நாட்டில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கும் அது தவறான நடவடிக்கைகளை மேற்கொள்ள தூண்டியுள்ளது.

இதுவும் வன்முறைகள் உச்சம் பெறுவதற்கான காரணம். சுயாதீனமானதும், நேர்மையானதுமான தேர்தலை நடத்தும் பொருட்டு காவல்துறையினரிடம் ஒழுங்கு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது தேர்தல் ஆணையாளரினதும், தேர்தல் கண்காணிப்பாளர்களினதும் கடமையாகும்.

நாட்டில் நடைபெறும் வன்முறைகளை தவிர்ப்பதற்கு அரச தலைவர் முயற்சிகளை மேற்கொள்ளாது வெறும் கண்டனங்களை வெளியிடுவது போதுமானதல்ல. நாட்டின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் அவரே பொறுப்பு.

அரச தலைவரினாலும், அவரின் நெருங்கிய ஆதரவாளர்களினாலும் தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதுடன், அரச சொத்துக்களும் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தொடர்ச்சியாக பயன்படுத்தப்படுகின்றன.

நேர்மையான தேர்தல் ஒன்று நடபெறுவதற்கான பாதுகாப்புக்களை வழங்கும் பொறுப்பில் இருந்து காவல்துறை மாஅதிபர் விலகியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் வன்முறைகளுக்கு அவரின் பொறுப்பற்ற தன்மை தான் காரணம்.

சிறீலங்காவில் வாழும் மக்கள் மிக உச்சக்கட்ட வன்முறைகளின் மத்தியில் வாக்களிக்க மீண்டும் மீண்டும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். குன்கமா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் குசுமாவதி குறுபுவராட்சி (58) என்பவர் உயிரிழந்தது வன்முறைகளின் உச்சத்தை காட்டுகின்றது.

இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு கொலையாளிகளை கைதுசெய்வது காவல்துறையினரின் கடமை.
எமக்கு கிடைத்த ஆரம்ப அறிக்கைகளின் படி அந்த பிரதேச அரசியல்வாதி ஒருவரே இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதியின் முன்நிறுத்ப்பட வேண்டும். சிறீலங்காவில் மோசமடைந்துள்ள தேர்தல் வன்முறைகளை நிறுத்துவதற்கு அனைத்துலக சமூகமும் சிறீலங்காவும் உடனடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.