டப்ளின் போர்க்குற்ற விசாரணை: நோர்வே தமிழர் சுகாதார அமைப்பு சாட்சியம்

அயர்லாந்து டப்ளின் நகரத்தில்  இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு சாட்சியமளிக்குமாறு நோர்வே தமிழர் சுகாதார அமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இலங்கை அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

ரோம் நகரை தளமாகக் கொண்டு சுயாதீனமான நடுவர்களால் இயக்கப்படும் (PPT) மக்களுக்கான நிரந்தர விசாரணை மன்றம் இப் போர்க்குற்றங்களுக்கான விசாரணையை மேற்கொள்ளவுள்ளது. இப் போர்க்குற்ற விசாரணை தை 14ம் மற்றும் 15ம் திகதிகளில் நடைபெவுள்ளது.

கடந்த மே மாத இறுதிக்காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட யுத்த குற்றங்களுக்கு அப்பால், 2002ம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தத்தை  இலங்கை மீறிய காலப்பகுதி தொடக்கம் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் நடவடிக்கைகளும் விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளது.

விசாரணை பற்றி முடிவுகள் வருகின்ற 16ம் திகதி வெளியிடப்படும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவ் விசாரணைக்கான ஏற்பாடுகளை சமாதானத்திற்கான அயர்லாந்து மன்றம் மேற்கொண்டுள்ளது.

மக்களுக்கான நிரந்தர விசாரணை மன்றம் (PPT) ஏலவே திபெத், மேற்கு சகாரா, ஆர்ஜென்டீனா, எரித்திரியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான், எல்சல்வடோர், கிழக்கு தீமோர், சயிரே, குவாற்றமாலா, மற்றும் ஆர்மேனிய மக்களின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை விசாரணை மேற்கொண்டிருந்தது. இந்நாடுகள் தவிர அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருந்த நிக்கராகுவா, பிறேசில் நாட்டின் அமேசன் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மனிதப்படுகொலைகளும் நிரந்தர விசாரணை மன்றத்தாலும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நோர்வே தமிழர் சுகாதார அமைப்பு சார்பில் வைத்திய கலாநிதிகள் பஞ்சகுலசிங்கம் கந்தையா அவர்களுக்கும், சிவகணேசன் தில்லையம்பலம் அவர்களுக்கும் விசாரணை மன்றில் 30 நிமிடம் சாட்சியம் அளிக்க அனுமதி வழங்கப்பட்டள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. விசாரணைகள் வெற்றிபெற நோர்வே தமிழர் சுகாதார அமைப்பு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.