தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளை வழங்குவதில் மெத்தனப் போக்கே தொடர்கின்றது – அமெரிக்க முன்னணி ஏடு
-
இவ் விடயம் 31. 01. 2010, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 2:20க்கு பதிவு செய்யப்பட்டது
- கட்டுரைகள்
2008 – இல் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தமிழ் புலிகள் மீது ராணுவத்தை வைத்து குண்டு மழை பொழிந்த போது “ராஜபக்சவிற்கு இது மிகப் பெரிய சவால்” என வருணிக்கப்பட்டது.
மே 2009-இல் புலிகளை அழித்து குண்டு மழை முற்றிலும் ஓய்ந்து நாட்டில் அமைதி நிலவிய போது ராஜபக்ச அந்தச் சவாலில் வெற்றி பெற்றார்.
இப்போது – போர் வெற்றியோடு தேர்தல் வெற்றியும் சேர்ந்து – சிறிலங்காவை எப்படியன ஒரு நாடாக ஆக்க வேண்டும் என்ற பொறுப்பை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ராஜபக்ச இருக்கின்றார்.
இவ்வாறாக அமெரிக்காவில் வெளியாகும் வோல் ஸ்ட்றீட் ஜேர்னல் [Wall Street Journal]ஏடு தெரிவித்துள்ளது. அதில் மேலும் எழுதப்பட்டுள்ளதாவது:
கடந்த செவ்வாயன்று நடந்த தேர்தலில் 58 சதவீத வாக்குகளை பெற்று மிகப் பெரிய வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட – புலிகளைப் போரில் வென்ற – முன்னாள் ராணுவ தளபதியை தோற்கடித்தாலும் தேர்தல் இதற்கு முன் போல் இல்லாமல் அமைதியாகவே நடைபெற்றது.
கடும் குறைபாடுகளுக்கு மத்தியிலும் தேர்தல் சில நன்மைகளை கொண்டு வந்துள்ளது. மிக முக்கியமாக இரண்டு சிங்கள தலைவர்களும் தமிழர் வாக்குகளுக்காக போட்டியிடும் சூழ்நிலை உருவானது.
முன்னதாக பொன்சேகா மிகப் பெரிய தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கூட்டணி ஏற்படுத்தினார். இது தானாக தமிழர் வாக்குகளை சேகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ராஜபக்சவை தள்ளியது.
இதன் விளைவாக அரசு தமிழ் அகதி முகாம்களில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. தேர்தல் அரசியல் சிங்கள இனவெறிக்கு எதிராக அமைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ராஜபக்சவின் முதல் முடிவு தொடர்ந்தும் இதே பாதையில் பயணிப்பதா இல்லையா என்பது தான்.
பயணிப்பார் என்பதையே அறிகுறிகள் காட்டுவதாக உள்ளன.
கடந்த சில மாதங்களாக விடுதலை புலிகள் வசம் இருந்த வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் போரின் போது அடித்து நொறுக்க்கப்பட்ட மற்றும் சிதிலமடைந்த கட்டமைப்புகளை மீண்டும் புணரமைப்பதில் கொழும்பு பணத்தை வாரி இறைத்தது.
அதிபரும் இந்த புனரமைப்புக்கள் தொடரும் என தேர்தலின் போது வாக்குறுதி அளித்ததோடு நேர்மையாக நடப்பதாகவே காட்டிக்கொண்டுள்ளார்.
இருப்பினும் தமிழர்களுக்கான அரசியல் உடன்படிக்கைகளில் முக்கியமாக ஐனநாயக தமிழர் தலைவர்கள் பல வருடங்களாக சட்டரீதியாக கோரும் உரிமைகளில் மெத்தனமே தொடர்கிறது.
அதிகாரத்தை அனைத்து மாகாணங்களுக்கும் பகிர்ந்தளிப்பதே இதற்கு தீர்வாக அமையும். ஆனால் அரசின் கவனம் ஆட்சியை கொழும்பில் இருந்து மாற்றுவதிலும் அதற்கான அரசியல் சட்டத்தை மாற்றியமைப்பதிலும் உள்ளது. இதற்கு மாற்றாக தேர்தல் பிரச்சாரங்களின் போது பொருளாதார வளர்ச்சி சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த சமாதானங்கள் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பது ஏப்ரலில் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின் தெரியும்.
பலதரப்பட்ட முறைகளை அமல்படுத்தி பார்த்த பின்னரே எந்த முறை சரியாக வரும் என்பதை பல வருடங்களுக்கு பின் முடிவு செய்ய முடியும்.
ராஜபக்சவின் இரண்டாவது முக்கிய பொறுப்பு சிறிலங்காவிற்கான அரசியல் திட்டத்தை வரையறுப்பது. சுதந்திரமான பத்திரிகைகள் மற்றும் ஆரோக்கியமான எதிர்கட்சிகள் கொண்ட முறையான ஜனநாயகம் ஏற்படுத்துவது.
பத்திரிகை சுதந்திரம் சிறிலங்காவில் எப்போதும் மோசமாகவே உள்ளது. எதிர்கட்சிகளுக்கு ஆதரவளித்த பல பத்திரிகை நிருபர்களும் ஆசிரியர்களும் படுகொலை செய்யப்பட்டதே இதற்கு சான்று.
தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு எதிர்கட்சிகளுக்கு ஆதரவளித்த வலைத் தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. பரந்த மனப்பான்மையுடன் விவாதிப்பதே வேறுபாடுகளை அமைதியான முறையில் களைய வழி வகுக்கும்.