யாழில் மீண்டும் படையினரின் கட்டுபாடுகள் அமுலுக்கு வருகின்றன!
-
இவ் விடயம் 31. 01. 2010, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 2:27க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு வெற்றி கிடைக்கவேண்டும் என்பதற்காக படையினர் காலம் காலமாக அமுல்படுத்தியிருந்த பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால் இப்போது மஹிந்த நினைத்தபடி வெற்றி கிடைத்துவிட்டதைத் தொடர்ந்து இலங்கை ராணுவமும், கடற்படையும் தமது கட்டுப்பாடுகளை மீண்டும் மக்களுக்கு விதிக்கத் தொடங்கியுள்ளனர்.
யாழ் குடாநாட்டுக்குள் பயணம் செய்யும் மக்களை அவர்கள் வாகனங்களிலிருந்து சோதனை செய்வது, தீவுப்பகுதிக்குச் செல்லும் மக்களை அல்லைப்பிட்டியில் மறித்துச் சோதனை செய்வது போன்ற பல நடைமுறைகள் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளன.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்ததும் தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதி மக்கள் மீள்குடியமர்த்தப்படுவார்கள் என்று டக்ளசும், ராணுவ அதிகாரிகளும் கூறியிருந்தனர். ஆனால் நேற்று வெள்ளிக்கிழமை தமது வீடுகளுக்குச் செல்லவிருந்த அப்பகுதி மக்களை ராணுவம் திருப்பி அனுப்பியுள்ளது. புங்குடுதீவு பகுதியில் மேலும் ஒரு புதிய சோதனைச் சாவடியையும் ராணுவம் அமைத்துள்ளது. நைனாதீவு, நெடுந்தீவுக்கு செல்லும் மக்கள் தமது தேசிய அடையாள அட்டையை குறிகட்டுவானில் கடற்படையிடன் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கிலும், மீளக்குடியமர அனுமதிக்கப்படுவர் என மக்களுக்கு வாக்குறுதி கொடுக்கப்பட்டது. ஆனால் மீள்குடியமரவென தமது வீடு, காணிகளைத் துப்பரவு செய்த மக்கள் கூட தமது வீடுகளில் இரவில் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மஹாஜன கல்லூரி மற்றும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆகியவற்றை இணைக்கும் சாலையை ராணுவம் மூடி அடைத்துள்ளது. தேர்தலுக்காக நீக்கப்பட்ட இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் மீளவும் போடப்பட்டு வருகின்றன.