அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காக கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் அடுத்தவாரம்

சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தோ்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் ஒன்று அடுத்த வாரத்தில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பெப்ரவரி 9 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. ஏப்ரல் 8 ஆம் திகதி பொதுத் தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான நியமனப் பத்திரங்களும் கோரப்பட்டடுள்ளன.

இந்த நிலையிலேயே அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணையை நிறைவேற்றுவதற்காக அடுத்த வாரம் நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்துவதற்கான அறிவித்தலை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச வெளியிடவுள்ளார்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான பிரகடனத்தில் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று திங்கட்கிழமை இரவு கைச்சாத்திட்டதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறாத நிலையில் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணையை வெளியிடும் அதிகாரம் அரசுத் தலைவருக்கு இருக்கின்ற போதிலும், பத்து நாட்களுக்குள் அதற்கான அங்கீகாரத்தை நாடாளுமன்றத்தில் அவர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

நாடாளுமன்றத்துக்கான பொதுத் தோ்தல் ஏப்ரல் 8 ஆம் திகதி நடைபெறவிருப்பதால் புதிய நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் ஏப்ரல் 22 ஆம் திகதி அரசுத் தலைவரால் வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயம் பற்றிய உங்கள் கருத்தை எழுதுங்கள்

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.