சிறிலங்காவுக்கான வரிச்சலுகை நீக்கமும் உலகத் தமிழர் புறக்கணிப்புப் போராட்டங்களும் ஆடை உற்பத்தியை பாதிக்கி்ன்றன
-
இவ் விடயம் 03. 03. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 11:38க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
ஐரோப்பிய ஒன்றியத்தின் வரி வசூலிப்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் இலங்கையின் ஆடைக் கைத் தொழிலில் காத்திரமான தாக்கத்தினை ஏற்படுத்தும்.
தரத்தில் கணிசமான அளவு முன்னேற்றத்தினைக் கண்டமைக்காக இலங்கையினது ஆடைக் கைத்தொழில் பாராட்டைப் பெற்றிருந்தாலும் தற்போது அது பிரச்சினையில் சிக்கியுள்ளது.
ஆடைக் கைத்தொழில் எதிர்கொள்ளும் பிரச்சினைக்குக் காரணம் அது செய்த தவறல்ல; மாறாக, சிறுபான்மை இனங்களுக்கெதிராக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட போர்க் குற்றங்களின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றது Ethical Corporation வெளியிட்டுள்ள ஒரு ஆய்வுக் குறிப்பு.
அது மேலும் தெரிவிப்பதாவது:
சிறிலங்காவிலிருந்து வரும் இறக்குமதிப் பொருட்களுக்கு இருந்த தீர்வை விலக்கை நிறுத்தும் நடவடிக்கையில் ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமாக இறங்கியுள்ளது. சர்வதேச மனித உரிமை சட்டங்களை சிறிலங்கா அரசாங்கம் மீறியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் கருதுகிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஆயிரக்கணக்கான சிறுபான்மைத் தமிழ் மக்களைக் கொன்று குவித்ததாகவும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் மனித உரிமை கண்காணிப்பகம் உள்ளிட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்தக் குற்றச் சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
வழங்கப்பட்டிருக்கும் வர்த்தக வரிச் சலுகை நீக்கப்படுமிடத்து, இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தைத்த ஆடைகளுக்கு ஐரோப்பாவில் 9.6 வீத வரி அதிகரிப்பு ஏற்படும்.
இதன் காரணமாக இந்த ஆடைகளின் விலை மேலும் உயர்வடைய, ஏனையவற்றுடன் போட்டியிட முடியாத நிலைக்கு இலங்கையின் ஆடைக் கைத்தொழில் தள்ளப்படும்.
இதனால் தொடர்புடைய ஐரோப்பாவின் பல்தேசிய நிறுவனங்கள், மலிவு விலையில் தரமான ஆடைகளை உற்பத்தி செய்யும் பிற நாடுகளை நாடும் நிலை ஏற்பட்டுவிடுமோ என சிறிலங்காவின் தைத்த ஆடை உற்பத்தியாளர்கள் அஞ்சுகின்றனர்.
தவிர, இலங்கையிலிருந்து பொருட்களை வாங்குவது இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகும் என்று கூறும் தமிழ் செயற்பாட்டாளர்களின் கண்டனத்திற்கு இத்தகைய பல்தேசியக் நிறுவனங்கள்கூட உள்ளாகின்றன.
GAP, Victoria’s Secrets ஆகிய வர்த்தக நிறுவனங்களின் முன்னால் கடந்த சில மாதங்களாக இலங்கை உற்பத்திகளைப் புறக்கணிக்குமாறு கோரி அமெரிக்க தமிழ் அரசியல் செயல் அவை [USTPAC] மற்றும் ஏனைய செயற்பாட்டாளர்கள் புறக்கணிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
GAP மற்றும் Victoria’s Secret ஆகிய நிறுவனங்கள் இலங்கையிலிருந்து தைத்த ஆடைகளைக் கொள்வனவு செய்து விற்பனை செய்வதன் மூலம் இலங்கை அரசாங்கம் அதன் இராணுவத்திற்கு நிதி திரட்டுவதற்கு மறைமுகமாக உதவுகின்றன”, என US-TPAC குற்றஞ்சாட்டியுள்ளது.
பிரித்தானியாவிலும் முன்னர் சிறிலங்காவில் பணியாற்றிய பிரித்தானிய மனிதாபிமானப் பணியாளர்கள் இணைந்து உருவாக்கிய Act Now எனும் பிரசாரக் குழுவினால் இது போன்ற இலங்கைப் பொருட்களைப் புறக்கணிக்குமாறு கோரும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறன.
இலங்கையிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதை நிறுத்துமாறு கோரி Marks & Spencer மற்றும் ஏனைய வர்த்தகர்களை இலக்கு வைத்தே அவர்கள் இந்தப் போராட்டத்தை நடாத்தினர்.
வர்த்தக வரிச் சலுகைகள் நீக்கப்படுவதாலும் புறக்கணிப்புப் போராட்டங்களாலும் தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிர்ப்பந்தத்தைத் தோற்றுவிக்கலாம் என இலங்கையின் ஆடை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
350 இற்கு மேற்பட்ட இலங்கையின் ஆடைத் தொழிற்சாலைகள் நேரடியாக 300,000 பேருக்குத் தொழில் வாய்ப்பு வழங்குவதுடன் மறைமுகமாக மில்லியன் கணக்கானோர் இத்துறையில் தங்கியுள்ளனர்.
நாட்டின் மிகப் பெரிய தொழில் வழங்கும் துறையாகத் திகழும் ஆடைக் கைத்தொழில் பெருமளவு அந்நியச் செலாவணியை பெற்றுத்தரும் துறையாகவும் விளங்குகிறது.
2008 இல் 4 பில்லியன் டொலர் பெறுமதியான தைத்த ஆடைகள் இலங்கை ஏற்றுமதி செய்திருந்தது. அவற்றுள் 36 வீதமானவை ஐரோப்பாவையே சென்றடைந்தன.
“ஐரோப்பிய ஒன்றியத்தின் கரிசனைகளை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் அதனுடன் நெருக்கமாக இணைந்து செயற்பட வேண்டும்” என்கிறார் இலங்கையின் முன்னணி வர்த்தக அமைப்பான Joint Apparel Association Forum இன் தலைவர் எஸ். சுகுமாரன்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக வரிச் சலுகையானது ஆடைக் கைத்தொழிலைத் தக்கவைப்பதற்கு மிகவும் இன்றியமையாதது என்கிறார் அவர்.
எனினும் வர்த்தக சங்கங்கள் வேறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளன. இலங்கையின் வாழ்க்கைச் செலவு தரத்தை உயர்த்துவதற்காகப் போராடும் அரச சார்பற்ற அமைப்புக்களையும் வர்த்தக சங்கங்களையும் உள்ளடக்கிய Apparel Industry Labour Rights Movement (Alarm) அமைப்பானது ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச் சலுகையானது தொழிலாளர்களுக்கு நன்மையளிக்கவில்லை என்று கூறுகிறது.
ஆனால் இலங்கையின் ஆடை உற்பத்தியாளர்கள் காலத்திற்குக் காலம் பல தார்மீக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு ஆடைக் கைத்தொழில் துறையானது “நேர்மையான முறையில் தைத்த ஆடைகள்” என்ற திட்டத்தை முன்வைத்தது.
இதில் தமது வேலையின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கு 130 தொழிற்சாலைகள் தாமாகவே முன்வந்தன. முதன் முறையாக, இலங்கையின் தைத்த ஆடைத் துறையே இரண்டு வருடங்களுக்கு முன்னர் Marks & Spencer நிறுவனத்தின் உதவியுடன் தமது தொழிற்சாலைகளை சூழல் சார்புடையதாக மாற்றியமைத்தன.
“நாம் நேர்மையான வழியில் தைத்த ஆடைகள் திட்டத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்ல உள்ளோம். பசுமைப் புரட்சியை ஏற்படுத்துவதற்கும் அவர்களின் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்குமான வழியைக் கடைப்பிடிப்பதற்கு நாம் எமது தொழிற்சாலைகளை ஊக்குவிக்கவுள்ளோம்,” என்கிறார் இலங்கை Apparel Exporters Association இன் தலைவர் குமார் மிர்சந்தனி.
முன்வைக்கப்பட்டுள்ள வரிச் சலுகை நிறுத்தம் தொடர்பில் ஐரோப்பிய வர்த்தகர்கள் மௌனம் காக்கிறார்கள். வரிச் சலுகையை நிறுத்துவதால் ஆடைகளின் விலை 9.6 வீதம் அதிகரித்த பின்னரும் இலங்கையிலிருந்து தைத்த ஆடைகளை அவர்கள் அவர்கள் கொள்வனவு செய்வார்களா என்பதே இங்கு மிக முக்கியமான வினாவாகும்.
“வரி அதிகரிப்பின் காரணமாக எங்களிடமிருந்து ஆடைக் கொள்வனவை அவர்கள் நிறுத்திக்கொண்டால், நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை ஏற்படும். எங்களிடம் ஒழுக்கமும் நேர்மையும் மிஞ்சி இருக்கும், ஆனால் தொழி்ல் நடக்காது என்று கொழும்பிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் உரிமையாளர் குறிப்பிட்டார்.