சிறிலங்காவின் இறையாண்மையை பிரித்தானியா மீறிவிட்டது – ஜிஎல் பீரீஸ்

கடந்த வாரம் பிரிட்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட் கலந்துகொண்டமை  மாபெரும் குற்றம் என்றும், மில்லிபாண்ட் அங்கு வெளி யிட்ட கருத்துகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் அவை சிறிலங்காவின் இறையாண்மைக்கு எதிரான செயற்பாடு என்றும் சீற்றத்துடன் கண்டித்துள்ளது.

அமைச்சரவைப் பேச்சாளர்  பேராசிரியர் ஜி.எல். பிரீஸ் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநட்டில் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:

உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட் கலந்துகொண்டதே முதல் குற்றமாகும். அங்கு அவர் உரையாற்றியதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. உலகத் தமிழர் பேரவை என்பது சிறிலங்காவை கூறுபோடும்,  நாட்டை அழிக்க நினைக்கும் இயக்கமாகும்.

இவ்வாறான ஓர் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வது என்பது அதன் செயற்பாட்டை அங்கீகரிப்பதற்கு நிகராகும். உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரிட்டிஷ் வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மில்லிபாண்ட் கலந்து கொண்டமையை ஏற்றுக்கொள்ள முடியாது. இது இலங்கையின் இறைமைக்கு எதிரான செயற்பாடு.

உலகத் தமிழர் பேரவை நாடு கடந்த  அரசாங்கத்தை அமைப்பதற்கு முயற்சிக்கிறது. உலகத் தமிழர் பேரவை இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.  இது இலங்கைக்கு எதிரான ஒரு பிரசார நடவடிக்கை  ஆகும், என்றும் அவர் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.