லங்கா ஈநியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் நாட்டை விட்டு வெளியேற்றம்

லங்கா ஈநியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் சந்தரூவான் சேனாதீர அவரது உயர் பாதுகாப்பு கருதி வெளிநாடு சென்றுள்ளதாக மிகவும் நம்பத் தகுந்த சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.

சேனாதீர இலங்கையில் சிங்கள இணையத்தளங்களை பிரபலப்படுத்துவதற்காக முக்கிய பங்காற்றியிருந்தார்.

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் வாசகர்கள் மத்தியில் மிகவும் புகழ்ப்பெற்றுள்ள லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர அரசத் தரப்பு பெரும் முயற்சிகளை மேற்கொண்டதுடன் முயற்சி தோல்வியடைந்ததால், அந்த இணையத்தளத்தின் ஆசிரியர் சந்தருவான் சேனாதீர, செய்தியாசிரியர் பேர்னாட் ரூபசிங்க ஆகியோருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
 
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேக்காவை பகிரங்கமாக  ஆதரித்த லங்கா ஈ நியூஸின் அரசியல் கட்டுரையாளர் ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்நேலியகொட கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி கடத்தப்பட்டார். அவருக்கு என்ன நேர்ந்தது என்பது இதுவரை தெரியவில்லை. ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இணையத்தள ஆசிரியர் சேனாதீரவுக்கு பாரியளவில் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதுடன் பல தடைவைகள் அவரை கடத்திச் செல்லவும் முயற்சிக்கப்பட்டது.
 
இந்த நிலைமையில் அவர் தனது வீட்டுக்கு செல்லாமல் இரகசியமான இடமொன்றில் இருந்தவாறு இணையத்தளத்தை பதிவேற்றிவந்தார். தற்போது வெளிநாட்டில் இருந்த போதிலும் சேனாதீர தொடர்ந்தும் இணையத்தளத்தை பதிவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் பற்றிய உங்கள் கருத்தை எழுதுங்கள்

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.