இராஜவரோதயம் சம்பந்தன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு ஒரு திறந்த மடல்
-
இவ் விடயம் 09. 03. 2010, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 12:49க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள், விசேட செய்தி
திரு. இராஜவரோதயம் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி ஆகியோருக்கு:
கடந்த மே 2009 இற்கு பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள்.
இலங்கை அரசியலில் 2009 மே 18இற்கு முன்னர் தமிழ்த் தேசிய அரசியலின் தீர்மானிக்கும் ஆற்றல் [Demanding Power] எவ்வாறு இருந்தது என்பது பற்றியும், அதற்கு பின்னரான இன்றைய நமது அரசியலின் பலவீனமான நிலைமை பற்றியும் நீங்கள் அறிவீர்கள்.
அவற்றை அறியாமல் இருக்கும் அளவுக்கு நீங்கள் ஒன்றும் அரசியல் தெரியாத கத்துக்குட்டிகள் அல்ல.
எனவே அதன் உள்ளடக்கங்களை நான் விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை.
நமது அரசியலின் இயங்கியல் இரு பகுதிகளாகக் கழிந்தது.
மிதவாத அரசியல் வழிமுறை ஒன்றின் மூலம் தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரத்தை பெற்றுக் கொள்ள முடியுமென்ற நம்பிக்கையின் காலமாக ஒரு பகுதியும்,
இல்லை, ஆயுத வழிமுறைப் போராட்டத்தினால் மட்டுமே நமக்கான அதிகாரத்தை உறுதிப்படுத்த முடியுமென்ற பிறிதொரு நம்பிக்கையின் காலமாகவும் இன்னொரு பகுதியும் கழிந்திருக்கிறது.
இறுதியில் – இரண்டு நம்பிக்கைகளும் தோல்வியையே பதிவு செய்திருக்கின்றன.
மிதவாத அரசியலின் தோல்வியிலிருந்து ஆயுத ரீதியாக உருக் கொண்ட எமது விடுதலைப் போராட்டம், அதன் தோல்வியைத் தொடர்ந்து மீண்டும் மிதவாத அரசியலிலேயே சரணடைந்திருக்கிறது.
ஏன் எங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டது…? அதில் செல்வாக்குச் செலுத்திய காரணங்கள் எவை…?
இது பற்றியெல்லாம் தமிழ் மக்களுக்கான தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் நீங்கள் நன்கு அறிவீர்கள் என்றே நான் நம்புகிறேன்.
இதனைக் கூட என்னைப் போன்ற சாமானியர்கள் தங்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையை ஏற்படுத்த மாட்டீர்களென்றும் நம்புகிறேன்.
ஒரு தோல்வி அனுபவத்திற்குப் பின்னர் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முயல்வோர் -
அந்த தோல்வியின் உட்காரணங்களையும்,
அந்த தோல்வி நமது அரசியல் அரங்கிற்குப் புதிதாகக் கொண்டு சேர்த்திருக்கும் சவால்களையும்,
இந்தச் சூழலைத் தங்களது ஆதிக்க நலனிற்கு ஏற்ப கையாள்வதற்கான கொழும்பின் தந்திரோபாய நகர்வுகள் பற்றியும்,
விடுதலைப் புலிகளின் அழிவின் பின்பலமாகத் தொழிற்பட்ட பல்வேறு அன்னிய சக்திகளும் – புலிகளற்ற இலங்கையைத் தமது நலன்களுக்கு எற்ப கையாளுவதற்கான சந்தர்ப்பங்கள் பற்றியும் நீங்கள் பரிசீலிக்காமல் இருந்திருக்க மாட்டீர்கள் என்றே நான் நம்புகிறேன்.
ஆனால் – இன்று நீங்கள் நடந்து கொள்ளும் முறையைப் பார்க்குமிடத்து உங்கள் அரசியல் புலைமைத்துவம் குறித்து சந்தேகங்களே எழுகின்றன.
ஓர் ஆழமான அரசியல் ஆய்வுக் கண்னோட்டத்துடன் தான் நீங்கள் நடந்து கொள்கிறீர்களா அல்லது உங்களது தனிப்பட்ட காழ்ப்புணர்வுக்கான களமாகத் தமிழர் தேசிய அரசியலை கையாள முனைகின்றீர்களா…?
ஜனநாயகத்தில் பல்வேறு குரல்களுக்கும் பல்வேறு செயற்பாடுகளுக்கும் இடமுண்டு என்பதில் என்னிடம் கருத்து பேதமில்லை.
பன்முகத்தன்மைக்கான அங்கீகாரம் என்பது தான் ஜனநாயகத்தின் அடிப்படையாகும்.
எனவே அந்த வகையில் தமிழர் தேசிய அரசியலில் பல்வேறு தரப்புக்களும் தமது அபிப்பிராயங்களைச் சொல்வதற்கும் அதற்காகச் செயலாற்றுவதற்குமான தார்மீக உரிமைப்பாடு அவர்களுக்கு உண்டு என்பதிலும் நான் உடன்படுகிறேன்.
ஆனால் அந்த தார்மீக நியாயம் தமிழ் மக்களின் அடிப்படையான அரசியல் நியாயத்தைக் குழி தோண்டிப் புதைப்பதாக இருந்துவிடக் கூடாது.
வெறும் சுயநலத்திற்கும் வரட்டு கௌரவத்திற்குமாக – இன்று வீதியருகில் ஆதரவு தேடிக் கிடக்கும் தமிழர் தேசிய அரசியலை மேலும் நடுவீதிக்குக் கொண்டு வந்து அனாதரவாக்கி உருச் சிதைப்பதாக உங்கள் நடவடிக்கைகள் அமையக் கூடாது.
அது, ஒரு தலைமைத்துவம் குறித்துச் சிந்திக்கும் தங்களுக்கு ஏற்புடையதுமல்ல
விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னர் நமது அரசியலைத் தக்க வைப்பதற்கான ஒரேயொரு நம்பிக்கையாக இருந்தது தமிழ்த் தேசிய கூட்டமைப்பே ஆகும்.
இது கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒருவர் அருகே மிதந்து வந்துகொண்டிருந்த மரத்துண்டு ஒன்றைப் பற்றிப் பிடித்தற்கு ஒப்பானது.
ஆனால் – அது கூட, அவரது கையை விட்டு அகலுவது போன்ற ஒரு உணர்வு தான் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது நம்பிக்கை கொண்ட மக்களை ஆட்கொண்டிருக்கிறது.
மக்கள் ஒர் அரசியல் நிலைப்பாட்டை வெறுக்கத் தொடங்கிவிட்டார்கள் எனில் அந்த அரசியலை அழிக்க எதிரிகள் எவரும் வெளியில் இருந்து வரவேண்டியதில்லை.
மக்களைச் சார்த்திருக்காத அரசியல், தனது அழிவிற்கான உட்கூறையும் தனக்குள்ளேயே கொண்டிருக்கிறது.
இந்தப் படிப்பினை நமது ஆயுதப் போராட்ட அனுபவங்களின் மூலம் எமக்கு கிடைத்த ஒன்று.
மக்களின் விடுதலைக்காக வெளிக் கிளம்பிய விடுதலை இயக்கங்கள் அனைத்தும் இறுதியில் மக்களை மறந்து தமது அதிகாரத்திற்காக இயங்குவதையே பிரதான இலக்காகக் கொண்டன.
மக்களுக்கான அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகத் தோற்றமெடுத்த இயக்கங்கள் இறுதியில் தமக்கான அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான இயக்கங்களாக உருமாறின.
ஆரம்பத்தில் “எங்கட பின்ளையள்” என்று அன்னியோன்யமாக வாஞ்சையுடன் பழகிய மக்கள் இறுதியில் அச்சத்துடன் “அவங்கள் இயக்கம்” என்றனர்.
இந்த வரலாற்று அனுபவத்திலிருந்து எதையாவது நாம் கற்றுக் கொள்ள முயன்றிருக்கின்றோமா என்றால் நிச்சயமாக இல்லை.
அதற்கான அசைவுகளைக் கூட நம் மத்தியில் காணவில்லை.
எங்களைப் போன்றவர்களின் நிலைமையோ விக்கிரமாதித்தியன் கதையில் வரும் வேதாளம் போன்று இருக்கிறது.
மீண்டும் மீண்டும் நாங்களோ உங்களிடம் ஒற்றுமைக்காக யாசகம் செய்து கொண்டிருக்கிறோம்.
இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியினரும் மாறி மாறி விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர்.
உங்கள் விமர்சனங்களைப் பார்த்தால் – ‘இனி நாங்கள் ஒன்றுபடப் போவதில்லை; இப்படியே தான் எதிர் துருவங்களாக இருக்கப் போகின்றோம்’ என்று மறைமுகமாகச் சொல்லுவது போன்றே தெரிகிறது.
நமக்கிடையிலான முரண்பாடுகளை அகநிலை முரண்பாடுகளாகக் கருதி நமக்கான அரசியலை ஒரு சனநாய அணுகுமுறையுடன் நகர்த்திச் செல்வதில் தொடர்ந்தும் நாம் தோல்வியடைந்தவாறே இருக்கிறோம்.
ஏன் எங்களால் இதில் வெற்றி பெற முடியவில்லை…?
கடந்த காலத்தில், அகநிலை முரண்பாடுகளை ஒரு எதிர்த் தரப்பு அரசியலைக் கையாளுவது போன்றே விடுதலைப் புலிகள் அணுகினர். இறுதி வரை புலிகளால் மாற்றுக் கருத்துக்களைச் சகிப்புணர்வுடன் அணுக முடிந்திருக்கவில்லை.
பிறிதொரு வகையில் – விடுதலைப் புலிகளின் தலைமை சகிப்புணர்வுக்குப் பழக்கப்பட்ட ஒரு அமைப்பாகவும் இருக்கவில்லை.
சகிப்புணர்வற்ற அந்த அரசியல், இறுதியில், நமது தேசிய அரசியலைக் கூறுபடுத்தி அணுகும் எதிரெதிர் அரசியல் குழுவாதங்களைத் தோற்றுவித்தது.
அந்த குழுவாதங்களின் குழந்தைகளே இன்றைய கொழும்பின் காய் நகர்த்தல்களுக்கான தத்துப் பிள்ளைகளாக இருக்கின்றனர்.
இன்று கூட்டமைப்பின் அணுகுமுறையும் மேலும் சில தத்துப்பிள்ளைகளை கொழும்பிற்கு வழங்குவதை நோக்கியே செல்கிறது.
விடுதலைப் புலிகள் பலமாக இருக்கும் வரைக்கும் ஒன்றுபட்டிருந்த கூட்மைப்பினருக்கு தற்போது என்ன நிகழ்ந்தது…? இதில் எவர் சரி எவர் பிழை என அளவிடுவதல்ல எனது நோக்கம்.
ஆனால் – கூட்டமைப்பின் இன்றைய உடைவு யாருக்கு ஆதரவாக அமையப் போகிறது…? இதனால் நன்மையடையப் போபவர்கள் யார்…? இந்த கோள்விகள் குறித்து நீங்கள் சிந்திக்க முன்வர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.
சம்மந்தரின் அணுகுமுறையில் பிரச்சனை இருக்கிறது என்பது உண்மை; ஆனால் ஒரு சம்மந்தரை மட்டுமே கருத்தில் கொண்டா தமிழ்த் தேசிய அரசியலை நகர்த்தப் போகின்றீர்கள்?
தமிழ்த் தேசிய அரசியல் என்பது நம் ஒரு சிலரின் தனிப்பட்ட பிரச்சனையல்ல நண்பர்களே!
நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய சந்தர்ப்பத்தில் பிளவுறுவதால் நாம் மேலும் நமது அரசியல் பலத்தை இழக்கிறோம் என்பதை ஏன் உங்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது.
இன்று - த. தே. ம. மு ஆகிய நீங்கள் திருகோணமலையில் போட்டியாளர்களை இறக்கியிருக்கின்றீர்கள். இதனால் திருகோணமலையின் தமிழ் பிரதிநிதித்துவம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.
நமக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை எதிரிக்குச் சகுனம் பிழைக்க வேண்டும் என்று எண்ணுவது நமது அரசியலுக்கு உகந்தது அல்ல.
ஏனென்றால் நமக்கு நாமே எதிரியாக முடியாது.
இதனால் பாதிக்கப்படப் போவது நமது மக்களே அல்லாமல் முரண்பட்டு நிற்கும் சம்பந்தரோ நீங்களோ அல்ல.
வேண்டுமானால் சம்பந்தருக்கு அவமானமும் உங்களுக்கு சந்தோசமும் ஏற்படலாம்.
ஆனால், அரசியல் அர்த்தத்தில் இதன் விளைவுகள் மிகவும் பாரதூரமானவை.
இன்று – இரா.சம்பந்தரை அவரது தாய் மாவட்டமான திருகோணமலையில் தோற்கடிப்பதற்காக திரைமறைவில் ஒரு சதி முயற்சி இடம்பெறுவதாகவே தெரிகிறது.
அரசு அவரது தோல்வியை விரும்புகிறது.
ஒருவரது தோல்வியை அரசு விரும்புகிறது என்றால் அதன் சாணக்கிய நிகழ்சி நிரல் வேறு ஒன்றாகும்.
இதனை உங்களால் எந்தளவு தூரம் விளங்கிக் கொள்ள முடிந்தது?
ஒரு அரசியல் அவதானி என்ற வகையிலும், தமிழ்த் தேசிய அரசியலை அதன் உள்ளாந்த அம்மசங்களுடன் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பதில் கரிசனை கொண்டவன் என்ற வகையிலும் – இது குறித்து எனது அவதானங்களை உங்களுக்கு சொல்ல வேண்டியிருக்கிறது.
இரா.சம்பந்தர் என்ற ஒரு தனி நபரைத் தோற்கடிப்பதன் பின்னாலுள்ள சிங்கள ராஜதந்திர நிகழ்சி நிரல் என்ன?
சிங்கள சாணக்கியம் இதன் மூலம் மூன்று விடயங்களை குறிவைக்கின்றது.
ஒன்று – சர்வதேச ரீதியாக ஈழத் தமிழ் மக்களின் சனநாயகத் தலைமைக்குரிய சகல தகுதிகளையும் கொண்ட ஒருவராகக் கருதப்படும் இரா.சம்பந்தரை அவரது மாவட்டத்திலேயே தோற்கடிப்பதன் மூலம் அவரது அரசியல் தலைமைத்துவத் தகுதியை இல்லாமல் செய்தல்.
சொந்த மக்களாலேயே நிராகரிக்கப்பட்ட ஒருவர் அந்த மக்களின் அரசியல் அவா குறித்து எவ்வாறு அரசுடனும் அனைத்துலகத்துடனும் பேச முடியும்?
இரண்டு – இணைந்த வடக்கு-கிழக்கு என்பதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பவர் சம்பந்தர் என்ற வகையில் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கிலேயே அவரைத் தோற்கடிப்பதன் மூலம் அந்த நிலைப்பாட்டை சனநாய அரசியலைக் கொண்டே பலவீனப்படுத்துவது.
அதே வேளை – இன்றைய சூழலில் வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தலைவராக இரா.இசம்பந்தரே இருக்கிறார்.
வடக்கு-கிழக்கின் இணைப்புப் பற்றி அக்கறை கொள்ளும் நாம் வடக்கு-கிழக்கு என்பது மனங்களால் இன்னும் இணைக்கப்படவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
சம்பந்தர் தோற்கடிக்கப்படுமிடத்து வடக்கினையும் கிழக்கினையும் அரசியல் அர்த்தத்தில் இணைப்பதற்கான வாதம் அதன் உள்ளார்ந்த அம்சத்தை இழந்து போகும்.
ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு திருமலையில் முற்றிலும் சிங்கள வேட்பாளர்களை இறக்கியிருப்பதும் இந்தப் பின்புலத்தைக் கருத்தில் கொண்டு தான்.
மூன்று – தமிழரின் எதிர்ப்பு அரசியலை வடக்கு மற்றும் கிழக்கு என இரு வேறாக்கி நிரந்தரப்படுத்துவது.
இணைந்த வடக்கு-கிழக்கு மாநிலம் என்பது தமிழ்த் தேசியத்தின் புவியியல் பலமாகும்.
எனவே தமிழ்த் தேசிய வாதம் அதன் பிரதான பலமாக இருக்கும் புவியியல் அடிப்படையில் சிதைக்கப்படுமாயின், அது வெறுமனே ஒரு அரசியல் சூத்திரமாகவே உயிர் வாழ முடியும்.
ஒரு கட்டமைப்பிற்கான பின்பலமற்ற அரசியல் நிலைப்பாடுகள் அனைத்தும் ஆசுவாசப்படும் கற்பனையாக இருக்க முடியுமே தவிர செயலுக்கான ஒரு உயிச் சக்தியாக [Organic Power] இருக்க முடியாது.
அமெரிக்காவில் கம்யூனிசம் பற்றி பேசுவது போன்று.
ஆரம்பத்திலிருந்தே கூட்டமைப்பின் அனுகுமுறையை அவதானித்து வந்தவன் என்ற வகையில் அதில் சில குறைபாடுகள் இருக்கின்றன என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.
புதியவர்களை உள்வாங்குவதில் நீங்கள் காட்டிய தயக்கம் – குறிப்பாக இளைய தலைமுறயினருக்கு இடம் கொடுப்பதில் வெளிப்படுத்திய அசட்டைத்தனம், முதிர்ச்சியான அரசியல் அணுகுமுறை ஒன்றைக் கடைப்பிடிக்க முடியாத அளவிற்கான அவசரம் போன்ற பல குறைபாடுகள் இருந்ததைக் காண முடிந்தது.
ஆனாலும் – அந்தக் குறைபாடுகளையும் கடந்து செயலாற்ற வேண்டிய வரலாற்றுக் கடப்பாடு பற்றியே நான் இங்கு சுட்டிக் காட்ட முயற்சிக்கின்றேன்.
குறைபாடுகளை நிதானத்துடனும் அணுகி ஆக்கபூர்வமாகச் செயலாற்றுவதற்கான சிந்திப்பே இப்போதைய தேவை.
அதற்கான முன்னோட்டமாக உடன் நிறைவேற்ற வேண்டிய விடயங்களாவன:
மேலும் முரண்பாடுகளை வளர்க்கும் வகையில் செயற்படாமல் தேர்தலுக்கு பின்னர் அனைவரையும் ஓரணியில் நிறுத்தும் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் வகையில் சிந்திப்பது.
அதற்கான வழிமுறைகளில் கவனம் கொள்ளுவது.
ஒருவரை ஒருவர் எதிரியாக கருதுவது போன்ற விமர்சனங்களைத் தவிர்த்துக் கொள்வது.
தமிழ்த் தேசிய அரசியலைப் பலப்படுத்தும் வகையிலான கொள்கை நிலைப்பட்ட பிரச்சாரங்களை முன்னெடுப்பது.
எதிர்கால பொறிமுறை ஒன்றை கருத்தில் கொண்டு – தமிழர் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் பொருட்டு – த. தே. ம. மு. திருகோணமலை தேர்தல் களத்திலிருந்து விலகிக் கொள்வது.
அரசியலில் சந்தர்ப்பங்களைத் தவற விடுவோமாயின் மீண்டும் அடுத்த சந்தர்ப்பம் வரும் வரை அனாதாரவான நிலைக்கே தள்ளப்படுவோம்.
திரு.க.வே.பாலகுமாரன் தனது கட்டுரைகளில் ஜேர்மனிய சிந்தனையாளரான ஜோர்ஜ் சத்நயனாவின் வாசகம் ஒன்றை அடிக்கடி பயன்படுத்துவார்.
‘வரலாற்றின் தவறுகளை மறப்போர் அந்த தவறுகளை மீளவும் செய்யச் சபிக்கப்பட்டவர்களாவர்’.
தொடரும் சிங்களத்தின் கடும்போக்கு நிலைப்பாடுகளை விமர்சிக்கும் நோக்கிலேயே அவர் இந்த கூற்றை பயன்படுத்துவார்; ஆனால், இறுதியில் அதற்கு உதாரணமாக ஆகியவர்கள் நாமே தவிர சிங்களம் அல்ல.
இந்த வாசகம் இன்று தமிழ்த் தேசியத் தலைமைத்துவத்தை பொறுப்பெடுத்திருப்பதாகக் கருதும் உங்கள் அனைவரது தலையின் மேலும் தொங்கிக் கொண்டிருக்கிறது.
அது எப்போதும் உங்களை நோக்கி ஒரு பாறாங்கல்லாக விழலாம்.