பிரித்தானியாவுடன் தொடரும் சிறிலங்காவின் போர்
-
இவ் விடயம் 10. 03. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 5:22க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி Sir Peter Ricketts வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லகாமவுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக சிறிலங்காவுக்கு விஜயம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் நிரந்திர செயலாளரான Sir Peter Ricketts சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லகாமவை நாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் நடைபெறவுள்ள இச்சந்திப்புக் குறித்து செய்தி வெளியிட்டுள்ள அவ்வமைச்சு, இச்சந்திப்புக் குறித்த விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை.
ஆயினும், இலண்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் கலந்து கொண்டு உரையாற்றி இருந்தமை குறித்தும், உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளை பிரதமர் கோர்டன் பிரவுன் சந்தித்து கலந்துரையாடி இருந்தமை குறித்தும் இப்பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இம்மாநாட்டில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் கலந்து கொண்டு உரையாற்றி இருந்தமை மற்றும் பிரதமர் கோர்டன் பிரவுன் அவ்வமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்தமை குறித்தும் சிறிலங்கா அரசு தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தது.
சிறிலங்காவுடன் நெருங்கிய உறவைப் பேணுகின்ற பிரித்தானியா உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் கலந்து கொண்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக ஐக்கிய இராச்சியத்துக்கான சிறிலங்காத் தூதுவர் நிஹால் ஜயசிங்க தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழ் மக்களின் ஜனநாயகப் பாதைக்கு வலுச் சேர்க்கும் வகையிலேயே வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் கலந்து கொண்டதாக பிரித்தானியாவின் ஆசிய விவகார பிரதிப் பணிப்பாளர் Andrew Patrick சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.