“ஒன்றாய்ச் சேர்தல் தொடக்கம் ஒன்றாயிருத்தல் முன்னேற்றம் ஒன்றாய்ச் செயற்படுதலே வெற்றி”
-
இவ் விடயம் 11. 03. 2010, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 22:30க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள், புலத்தமிழர் செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்
“ஒன்றாய்ச் சேர்தல் தொடக்கம் ஒன்றாயிருத்தல் முன்னேற்றம் ஒன்றாய்ச் செயற்படுதலே வெற்றி”
இம்மடல் தங்கள் கைகளை நலமாக வந்தடையுமென நம்புகின்றேன். தலைவர் ஹென்றி போர்ட் அவர்களது மேலே தரப்பட்டுள்ள கூற்றை எண்ணிப் பார்க்கத் தமிழராகிய எமக்கு இப்பொழுதுள்ள நிலையிலும் சிறந்த நிலையொன்று இருக்க முடியாதென நான் நம்புகின்றேன்.
பெப்புரவரி 24 2010 அன்று இலண்டனிலுள்ள ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் வெற்றிமிகு தொடக்க மாநாட்டை அடுத்து இம்மடலைத் தங்களுக்கு வரைவதில் பேருவகை அடைகின்றேன். அதேவேளை சிறீலங்காவில் வாழும் எம் உடன்பிறப்புகள் பலரது பெரும் கவலைக்குரிய நேரத்தில் இதை எழுதுகின்றேன் என்பதையும் அறிவேன்.
இப்பொழுது நிலவுகின்ற மனித அவலநிலை மற்றும் அரசியல் நிலை பற்றிப் பொதுவாகவும் தமிழர் எதிர்நோக்கியுள்ள நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றிக் குறிப்பாகவும் புதிதாக உருவாக்கப்பட்ட உலகத் தமிழர் பேரவையின் கருத்துக்களைக் கீழே தர முயற்சிக்கின்றேன். பாரிஸ் கூட்டத்தில் 14 நாடுகள் கூட்டாக வரைந்த உ.த. பேரவையின் நோக்கம்இ குறிக்கோள் ஆகியவற்றில் கூறப்பட்டதற்கு அமையஇ சிறீ லங்காவில் உயிர் பிழைத்து வாழும் தமிழரது மாந்தநேய மற்றும் அரசியல் தேவைகளைத் திறமையாக நிறைவுசெய்ய நாட்டு அடிப்படையிலும் பன்னாட்டு அடிப்படையிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழரை ஒன்று திரட்டி நாம் செயற்படுவோம்.
போரின் கடைசிக் கட்டத்தில் அப்பாவித் தமிழ் மக்களை பத்தாயிரக் கணக்கில் இரண்டகமாகக் கொடூரமான முறையில் கொன்று குவித்ததோடு குழந்தைகள் முதியோர் ஊனமுற்றோர் உட்பட 300000 தமிழரை அனைத்துலக மனிதாபிமான உதவிகள் ஏதும் கிடைக்காத வகையிலும் செய்தி ஊடகங்கள் அணுகாத முறையிலும் மிக மோசமான நிலையில் வதைமுகாங்களில் தடுத்து வைத்துவிட்டுச் சிறீலங்கா அரசு இன்னமும் அம்மக்களது அவல நிலையை அனைத்துலகுக்கு மறைத்து வருகின்றது. அத்தோடு பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு அனைத்துலக உதவி கிடைப்பதை வீம்புடன் தடுத்து வருகின்றது. முன்னர் வன்னி முகாங்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் ஓர் இலட்சத்துக்கு மேற்பட்டோர் வவுனியாஇ மன்னார் யாழ்ப்பாணம் முதலிய இடங்களில் புதிய முகாங்களில் தகுந்த மறுசீரமைப்பு இன்றியும் அடிப்படை வாழ்க்கை வசதிகள் இன்றியும் மட்டுப்படுத்தப்பட்ட இடம்பெயர்வாற்றல் உடையவர்களாகவும் இன்னமும் உள்ளனர்.
சரணடைந்த இளைஞரில் ஆயிரக்கணக்கானோர் முறையான விசாரணையோ சட்டவியல் பிரதிநிதித்துவமோ அற்ற நிலையில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துடன் கூடத் தொடர்பேதுமின்றி சிறைக்கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
போரானது 2009 மே 19 அன்றொடு முடிவுற்றுவிட்டது என அரசு அறிவித்ததோடு மறுசீரமைப்புப் பணிகள் மீள்கட்டுமானப் பணிகள் மீளிணக்கம் ஆகிய துறைகளில் தானெடுக்கும் முயற்சிகள் பற்றி அனைத்துலகச் சமூகத்திற்கு உறுதிமொழி வழங்கிவிட்டு அவற்றை நிறைவேற்ற மெய்யாக முயற்சிக்காது மாறாகத் தமிழர் தாயகத்தில் தென்னிலங்கையிலிருந்து சிங்கள பௌத்த மக்களைக் கொணர்ந்து குடியமர்த்தும் தன் வேலைத்திட்டத்தை வளர்ச்சித்திட்டம் என்ற போர்வையில் நிறைவேற்றி தமிழ் மக்களின் மொழி மற்றும் இறைநெறி அடையாளத்தை அழித்து வருகின்றது.
இந்த இக்கட்டான நிலையில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இத்தேர்தலில் தமிழர் அடியோடு ஆர்வமற்றவர்களாக உள்ளனர். இதனை அண்மையில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் தெளிவாகக் காட்டியுள்ளனர். இந்நிலையை இன்னுமிரு காரணிகள் மேலும்
மோசமாக்கியுள்ளன. இவற்றுள் ஒன்று அரசில் தம் செல்வாக்கையும் பதவியையுமே வேண்டித் தமிழரது உண்மையான வேட்கைகளை வஞ்சனை செய்கின்ற அரசியல்வாதிகள் எம்மிடையே உள்ளனர் என்பதாகும். இவர்கள் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு வன்முறையையும் ஊழல் வழிமுறைகளையும் கையாழுகின்றனர். அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்டுவரும் பிளவுகளையும் சிதைவையும் பெரும் கவலையுடனும் ஏமாற்றத்துடனும் நாம் கண்டுவரும் நிலை. தமிழரது அடிப்படை வேட்கைகளை ஒரே குரலில் எடுத்தியம்புவதற்கான ஒற்றுமையை இது நலிவுபடுத்தி அடக்குமுறையாளரும் இரண்டகர்களும் தம் பணிகளை எளிதாகச் செய்ய வழிசெய்கின்றது.
எமது உடன்பிறப்புகள் அடிப்படை வாழ்க்கை வசதிகள் ஏதுமற்றுத் துன்புற்று ஊழலையும் தமிழரது உண்மையான அடிப்படை உரிமைகள் பற்றிய குழப்பத்தையும்; கலக்கத்தையும் எதிர்கொண்டுள்ள இவ்வேளையில் உலகத் தமிழர் பேரவையின் கீழ் ஒன்றுபட்டுள்ள புலம் பெயர்ந்த தமிழராகிய நாம் இலங்கைத் தீவில் உயிர்வாழ்வதற்கு இன்னமும் அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் எமது உடன்பிறப்புகளுக்கு எம் பரிவையும் கூட்டொருமையையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றோம். அவர்களோடான எமது கூட்டொருமை அக்கறை ஆகியவற்றின் சிறு அடையாளமாக வடகிழக்கில் இயங்குகின்ற நம்பகமிக்க அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக உள் ஊரில் இடம்பெயர்ந்த சிறப்பாக ஆதரவற்ற சிறுவர் கைம்பெண்கள் போன்றோருக்கு நிதியுதவி வழங்கும் பணியை ஏற்கனவே நாம் தொடங்கியுள்ளோம். மறுசீரமைப்பும் இயல்பு வாழ்க்கை நிலையும் பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு வழங்கவேண்டிய பொறுப்பானது பாதிக்கப்பட்டோருக்குக்கான உதவி என்ற பெயரில் ஏராளமான நிதியுதவியைப் பெற்றுவரும் அரசுக்கே பெருமளவில் உரியதென்பதாலேயே சிறுஅடையாளமான உதவியெனக் குறிப்பிட்டுள்ளோம்.
பசி பட்டினியோடு அச்சமுற்றும் அச்சம் ஊட்டப்பட்டும் நாம் உள்ளோம். இன்றைய நிலையில் தமிழரது துயர துன்பங்களுக்கு முடிவு உண்டென்றால் அது எமது உண்மையான விடுதலையிலேயே தங்கியுள்ளது. எனவே இலங்கைத் தீவில் வாழுகின்ற எம் உடன்பிறப்புகளுக்கே எமது உண்மையான விடுதலைக்கான மூல அடிப்படைப் பொறுப்பு உள்ளது. ஆகையால் தம் வாக்குகளை இட்டு நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் போது தமிழரது விடுதலைக் குறிக்கோளுக்கு இரண்டகம் இழைக்கக்கூடிய பொய்யான அரசியல் தலைவர்களுக்கோ கட்சிகளுக்கோ ஆதரவு வழங்காது சிறீலங்காவிலும் வெளியேயும் வாழும் ஒட்டுமொத்தத் தமிழரது அடிப்படை வேட்கைகளில் பற்றுறுதியுடையோருக்கு ஆதரவு வழங்குமாறு நாம் பரிந்துரைத்து வலியுறுத்துகின்றோம்.
எமக்கு உள்ளார்ந்தமாக உள்ள தன்னாட்சி உரிமைஇ தமிழரது அடிப்படை வேட்கைகள் தமிழரது தேசியம்இ தாயகம் தன்னாட்சியுரிமை ஆகிய கோட்பாடுகளுக்குத் துணிவுடன் நிலைத்தியங்கக்கூடிய அரசியல் தலைவர்களையும் கட்சிகளையும் உலகத் தமிழர் பேரவையானது புலம்பெயர்ந்த தமிழரிடையுள்ள பல்வேறு வளங்களையும் திரட்டி ஆதரித்து அவர்களோடு சேர்ந்து பணியாற்றும்.
உலகத் தமிழர் பேரவை பற்றிய கூடுதல் தகவல்களைக் கீழே தரப்பட்டுள்ள எமது இணையத்தளத்திலிருந்து அறிந்துகொள்ளுமாறு வேண்டுகின்றேன்.
உங்கள் உண்மையான
வண. எஸ்.ஜெ. இமானுவேல்
தலைவர் – உலகத் தமிழர் பேரவை
