11000 புலிச்சந்தேக நபர்களையும் தொடர்ந்தும் சிறை வைக்க முடிவு! 11000 ஏக்கர் நிலத்தில் பண்ணை!!
-
இவ் விடயம் 13. 03. 2010, (சனி),
தமிழீழ நேரம் 12:39க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்தி
தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 11000 விடுதலைப் புலிகள் போராளிகளையும் நீண்ட கால நோக்கில் சிறைப்படுத்தும் திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்குமாறு சர்வதேச சமுதாயம் குரல் கொடுத்துவரும் நிலையில் அதனை முறியடிக்கும் விதமாக அரசினால் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அரசின் குறித்த இரகசிய திட்டம் தொடர்பாக வெளிவந்துள்ள தகவல்கள் வருமாறு
ஐந்நூறு போராளிகளுக்கு வேலை வழங்கக்கூடியதாக பாற்பண்ணை உள்ளிட்ட விவசாய பண்ணைகள் அமைக்கப்படவுள்ளன. இவ்வாறு ஆறு பண்ணைகள் அமைத்து அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள போராளிகள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள்.
அலை- கந்தளாய், கண்டல்காடு, திருக்கோணமடு ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்படவுள்ள இப்பண்ணைகள் மொத்தமாக 11000 ஏக்கர் பரப்பளவை கொண்டிருக்கும்.
அத்துடன் திருமணம் செய்த சந்தேக நபர்களின் குடும்பங்களையும் இணைத்து வாழவைக்கும் திட்டம் என்ற பெயரில் இன்னொரு திட்டத்தையும் அரசு முன்னெடுக்கவுள்ளது.
இதன் முதற்கட்டமாக வலயம் – 5 எனக்குறிப்பிடப்படும் மெனிக் முகாம் பகுதியில் 142 குடும்பங்களையும் 11 குழந்தைகளை கொண்ட எட்டு தாய்மார்களையும் குடியமர்த்தும் திட்டம் அமைச்சர் மிலிந்த மொறகொடவின் திட்டப்படி முன்னெடுக்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து திருகோணமலை மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் போன்ற இடங்களிலும் இவ்வாறான ”குடும்பமாக தடுத்துவைக்கும் திட்டம்” முன்னெடுக்கப்படவுள்ளது.
இவ்வாறு மெனிக் முகாம் பகுதியில் தொடர்ந்து தடுத்துவைக்கப்படவுள்ள திருமணம் செய்த குடும்பத்தினர்கள் இராணுவத்தினரின் கண்காணிப்பின் கீழ் ”சுதந்திரமாக” வைக்கப்படுவார்கள் எனவும் அரச அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
