தேசிய சுதந்திர முன்னணியின் நடவடிக்கை மூலம் பான்‐கீ‐மூன் பாடம் கற்றுக்கொள்வார் ‐ விமல்
-
இவ் விடயம் 07. 07. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 20:02க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
தேசிய சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்த அமைதியான எதிர்ப்பு போராட்டத்தை காவற்துறையின் பலத்தை கொண்டு கலைத்த காவற்துறை உயர் அதிகாரி இலஞ்சம் பெறுபவர் எனவும் அவர் போராட்டகார்களை கலைக்க ஐக்கிய நாடுகள் சபையிடம் இலஞ்சம் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் பணியாளர்களை வெளியில் செல்லவிடாது அமைதியான முறையிலான போராட்டத்தை மேற்கொண்டனர்.
ஆர்ப்பாட்டங்களின் போது சிறிய இடையூறுகள் ஏற்படுவது இயல்பானது என தெரிவித்துள்ள வீரவன்ஸ நிபுணர்கள் குழுவை விலக்கிக் கொள்வது குறித்து ஐ.நா செயலாளர் இன்று அறிவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தின் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பான்‐கீ‐மூன் இன்று குழுவின் விலக்கிக்கொள்வது குறித்து அறிவிப்பு எதனை வெளியிடாவிட்டால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம், சாகும் வரை மேற்கொள்ளப்படும். நாட்டுக்காக எடுக்கப்பட்டுள்ள இந்த தீர்மானத்திற்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.
இராஜதந்திர ரீதியில் தீர்ப்பட வேண்டிய பிரச்சினைகள் இருக்கின்றன. எனினும் நிபுணர்கள் குழு தொடர்பான பிரச்சினையை இராஜதந்திர ரீதியில் தீர்க்க முடியாது. தேசிய சுதந்திர முன்னணியின் நடவடிக்கை மூலம் பான்‐கீ‐மூன் பாடம் கற்றுக்கொள்வார் எனவும் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.