வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்
-
இவ் விடயம் 29. 07. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 9:54க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியினால் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த யோசனைத் திட்டம் எதிர்வரும் வாரமளவில் சபாநாயகர் சமால் ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால், நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் பீரிஸ் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
நிபுணர்கள் குழு விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் உரிய ராஜதந்திர நடவடிக்கைகளை பின்பற்றத் தவறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
பாராளுமன்ற நெறிமுறைக்கு அமைய, ஆளும் கட்சிக்கு எதிர்க்கட்சிகளினால் விடுக்கப்படக் கூடிய மிகப் பெரிய அச்சுறுத்தல் நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றை கொண்டு வருதலாகும் என சுட்டிக்காட்டப்படுகிறது.
பாராளுமன்றில் போதியளவு நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்ள வேண்டியது ஆளும் கட்சிக்கு மிகவும் அவசியமானதென தெரிவிக்கப்படுகிறது.