விடுதலைப்புலிகளை வேரறுக்க சதியா?
-
இவ் விடயம் 28. 08. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 4:40க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்தி
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வரலாறு என்பது இலகுவில் அழிந்து போகக் கூடிய காகிதத்தில் எழுதப்பட்ட அல்லது கணனியில் தட்டச்சு செய்பட்ட கற்பிதமான ஒன்றல்ல. அது 32 ஆயிரத்துக்கும் அதிகமான மாவிரர்களதும் அதை விட அதிகமான போராளிகளினதும் அப்பழுக்கில்லாத ஈகத்தினாலும் ஈழப்போராட்டத்தின் வலியை வேதனையை பாரத்தை சுமந்த இலட்சக்கணக்கான மக்களின் உண்மையான அர்ப்பணிப்பினாலும் பங்களிப்பினாலும் காலப் பெருவெளியில் பதியப்பட்ட ஒன்றாகும்.
இந்த வரலாற்றை பதிவதற்கு ஆயிரமாயிரம் முகமறிந்த வீரர்களுடன் ஆயிரமாயிரம் முகமறியா வீரர்களும் தமது பங்களிப்பை நல்கியுள்ளனர்.குறிப்பாக விடுதலைப்புலிகளிடம் சிறந்தபுலனாய்வுக் கட்டமைப்புகள் இருந்தன. இந்தப் புலனாய்வுக் கட்டமைப்புகள் விடுதலைப்புலிகளின் பல்வேறு வெற்றிகளுக்கு -இராணுவ சாதனைகளுக்கு அடித்தளமாக இருந்தன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
இந்தப் புலனாய்வு கட்டமைப்புக்களில் பணிபுரிந்த எந்தவொரு போராளியும் தங்களை பகிரங்கமாக இனங்;காட்டியதும் கிடையாது தங்களுடைய வேலைகளை ஊடகங்களில் பகிரங்கப்படுத்தியதும் கிடையாது.
ஆனால் கடந்த வாரம் விடுதலைப்புலிகளின் பெயரை பயன்படுத்தும் சிலர் தாங்கள் சிலரது தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டதாக சில ஊடகங்களில் விடுதலைப்புலிகள் இயக்க மரபுக்கு மாறாக பரபரப்பு செய்திகளை வெளியிட்டிருந்தனர்.
இந்தப் பரபரப்பு செய்திகளின் உண்மை மற்றும் நம்பகத் தன்மைக்கு அப்பால் விடுதலைப்புலிகள் இயக்கத்தை அரசியல் ரீதியாகக் கூட தலையெடுக்க விடக் கூடாது என்கின்ற ஒரு சதிப்பின்னணி இதற்குப் பின்னால் இருப்பதாகவே எமக்குப் படுகிறது.
பொதுவான சர்வதேச நடைமுறையின் படி பல நாடுகள் தங்களது அரசியல் பொருளாதார இராணுவ நலன்களுக்காக ஏனைய நாடுகளை உளவு பார்ப்பது வழக்கமாகும் இதற்காக பல நாடுகள் தனியான வெளிநாட்டு உளவுத்துறை கட்டமைப்புக்களை வைத்திருக்கின்றன.
இந்த உளவுத்துறை கட்டமைப்புகள் ஒவ்வொருநாடுகளுக்கும் உரிய இராஜந்திர வலைப்பின்னலுக்குள் நுளைந்து தங்களது உளவு நடவடிக்கைளை மேற்கொள்வது வழக்கமாகும்;.
ஆனால் இந்த உளவு நடவடிக்கை கண்டுபிடிக்கப்படும் போது அல்லது பகிரங்கப்படுத்தப்படும் போது அந்த நடவடிக்கையின் ஈடுபட்டவர் ஒரு இராஜந்திர சேவையை சேர்ந்தவராக இருந்தால்அவரது இராஜதந்திர அந்தஸ்த்து பறிக்கப்பட்டு அவர் அவரது சொந்த நாட்டுக்கு நாடுகடத்தப்படுவார்.சாதாரண குடிமகனாக இருந்தால் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அதி உயர்ந்தபட்ச தண்டனைக்குள்ளாக்கப்படுவார்.இவ்வறான சம்பவங்கள் நாடுகளுக்கு இடையிலான மோதல்கள் மற்றும் போர்களை உண்டாக்கிய வரலாறுகள் நிறைய இருக்கின்றன.
உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி பல விடுதலை இயக்கங்களை மேலாதிக்க சக்திகள் திட்டமிட்டு அழித்த வரலாறுகளும் நிறைய இருக்கின்றன.
விடுதலைப்புலிகளை இந்த மேலாதிக்க சக்திகள் தங்களது பிராந்திய நலன்களுக்காக பயங்கரவாதப் பட்டியலில் இட்டிருக்கும் நிலையில் நாங்கள் உளவுப்பிரிவு நடத்துகிறோம் புலம் பெயர்ந்த நாடுகளில் வதிபவர்களுடைய தொலைபேசிகளை ஒட்டுக்கேட்கிறோம் என்று அறிக்கை விடுவதும் காதில் பூச்சுற்றுவதும் இதைச் செய்பவர்களைச் சேர்ந்தவர்களுக்கு சாகசம் மிக்கதாகவும் பரபரப்பானதாகவும் இருக்கலாம்
ஆனால் விடுதலைப்புலிகளுக்காக புலத்தில் தங்களை அர்ப்பணித்து வேலை செய்த உண்மையான பல செயற்பாட்டாளர்களுக்கும் கடந்த வருடம் இடம் பெற்ற வன்னிப் பேரவலத்தில் இருந்து உயிர் தப்பி புலத்தில் தஞ்மடைந்து அகதி அந்தஸ்த்துக்காக காத்திருக்கும் பல நூற்றுக்கணக்கான முன்னாள் போராளிகள் மாவீரர் குடும்பங்கள் மற்றும் மக்களுக்கு இது பாரிய தீங்கை விளைவிக்கும் என்பதையும்; எதிர்காலத்தில் புலம் பெயர்ந்த தமிழர்களின் விடுதலைப்புலிகள் என்ற அடையாளத்தின் கீழ் ஒன்றிiயாதபடி இது தடுக்கும் என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
விடுதலைப்புலிகள் இவ்வாறான போலி புலனாய்வு அமைப்புக்களுக்கும் தங்களுக்கும் எந்தவித சம்மந்தவும் இல்லை என்பதையும் புலம்பெயர்ந்த நாடுகளின் மனித உரிமைச் சட்டங்களை மீறம் வகையில் தாங்கள் புலம்பெயர்ந்த மண்ணில் எந்தவித உளவுச் செயற்பாடுகளிலும் ஈடுபடவதில்லை என்பதையும் மேற்குலகிற்கு தெளிவுபடுத்தவேண்டும்.
நன்றி: தாய்நிலம்