தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் ‐ சிவசக்தி ஆனந்தன்
-
இவ் விடயம் 02. 09. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 18:41க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
இன்று வன்னி மாவட்டத்தின் ஓமந்தை, சேமமடு ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் நடமாடும் சேவையைப் பார்வையிடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இவ்வாறே முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற அபிவிருத்திக் கூட்டங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
வாக்களித்த மக்களின் அபிவிருத்தி தொடர்பாக தமது கருத்துக்களை எடுத்துரைப்பதற்குக்கூட சந்தர்ப்பம் மறுக்கப்படுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மறுக்கப்படுவதையே மேற்படி சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஓமந்தை, சேமமடு மக்கள் கடந்த 15ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெயர்ந்து இப்பொழதுதான் தமது கிராமங்களில் குடியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது விடயத்தில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
நடமாடும் சேவையின்பொழுது நான் இவைகளை நேரில் சென்று உரிய அதிகாரிகளிடம் விளக்கி அம்மகளுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்ளலாம் என்றிருந்த வேளையில் எம்மை அழைக்காதது எமக்கு வருத்தமளிப்பதுடன், எமது உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன் என்று தனது ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் சிவசக்தி ஆனந்தன் வெளியிட்டுள்ளார்.