13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை அமுல்படுத்துவதன் மூலம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் ‐ சிவாஜிலிங்கம்
-
இவ் விடயம் 03. 09. 2010, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 22:00க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை அர்த்தமுள்ள வகையில் அமுல்படுத்துவதன் மூலம் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமா ராவுடன் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு நடத்திய சந்திப்பின் போது போது அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
தேசியப் பிரச்சிகை;கு தீர்வு காணும் நடவடிக்கைகளின் ஒர் கட்டமாக 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை அர்த்தமுள்ள வகையில் அமுல்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற வலயங்களில் மீள் குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் கடமையாற்ற அனுமதிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். மக்கள் குடியிருப்புக்கள் அமைந்துள்ள பிரதேசங்களில் இராணுவ முகாம்கள் நிறுவப்படக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு, நிரூபமா ராவிடம் 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. உயர் பாதுகாப்பு வலயங்களை கிராமமாக அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
மீள் குடியேற்ற நடவடிக்கைகளின் போது பிரதேசங்களின் சனத் தொகைப் பரம்பலில் மாற்றம் ஏற்படுத்தப்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான முயற்சிகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என அ நிரூபமா ராவ் தெரிவித்துள்ளார்.