மாகாணசபைகளின் அதிகாரங்களைப் பறிக்க சிறிலங்கா அரசு சதி – இந்தியாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முறையீடு
-
இவ் விடயம் 04. 09. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 12:21க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை அரசியலமைப்புத் திருத்தங்களின் மூலம் பறித்துக் கொள்ளும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் முறையிட்டிருக்கிறது.
கொழும்பில் இந்திய வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவைச் சந்தித்த போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பான அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
“13வது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அமைய உருவாக்கப்பட்ட மாகாண காவல்துறை ஆணைக்குழுக்களை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது.
முன்னதாக அரசாங்கம் மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையும் அதிபர் தேர்தலில் போட்டிடுவதற்கான தடைகளை அகற்றும் முயற்சியிலேயே இறங்கியது.
ஆனால் இப்போது சுதந்திர காவல்துறை ஆணைக்குழுவை செயலற்றதாக்கப் போகிறது. அத்துடன் மாகாண காவல்துறை ஆணைக்குழுக்களும் செயலிழந்து விடும்.
இதன்மூலம் அதிகாரங்கள் மேலும் மத்தியில் குவிக்கப்படுவதற்கு வழிசெய்யப்படுகிறது“ என்று நிருபமா ராவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.