புலிகள் தொடர்ச்சியாக கடத்தல்களில் ஈடுபட்டு வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை – டக்ளஸ்
-
இவ் விடயம் 04. 09. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 12:24க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக கடத்தல்கள் மற்றும் கப்பம் கோரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த ஆரம்பக் காலப்பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் தற்போது அவ்வாறான பிரச்சினைகள் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
தெற்கில் இடம்பெறுவது போன்று வடக்கிலும் சாதாரண குற்றச் செயல்கள் இடம்பெறுவதாகவும், 90 வீதமான கடத்தல்கள் கப்பம் கோரல்கள் தற்போது இடம்பெறுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கப்பம் கோரல் மற்றும் கடத்தல் தொடர்பான பல சம்பவங்கள் வெறும் வதந்திகளே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும் வடக்கு மக்களை அவர்கள் அச்சுறுத்தி வருவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழவின் பிரதிநிதி பலிஹக்கார தெரிவித்த கருத்திற்கு பதிலளித்த போது அமைச்சர் தேவானந்தா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.