சிறிலங்கா நாடாளுமன்றில் அரசியலமைப்புத் திருத்த விவாதம் ஆரம்பம் – த.தே.கூ. உறுப்பினரும் அரசு பக்கம் தாவினார்
-
இவ் விடயம் 08. 09. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 16:12க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள், விசேட செய்தி
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பின் 18வது திருத்தச்சட்ட மூலம் மீதான விவாதம் ஆரம்பமாகியுள்ளது.
இன்றுகாலை 9.30 மணியளவில் சிறிலங்கா பிரதமர் டி.எம்.ஜெயரட்ண 18வது திருத்தச்சட்டமூலத்தை சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார்.
இதையடுத்து இதன் மீதான விவாதம் ஆரம்பமானது.
விவாதத்தின் ஆரம்பத்தில் பேசிய பிரதமர் டி.எம்.ஜெயரட்ண ஐ.தே.கவைச் சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பர் என்று நம்பிக்கை வெளியிட்டார்.
அதேவேளை, ஐ.தே.கவினர் விவாதத்தில் பங்கேற்காமல் வெளியே போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன அரசியலமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக இன்று காலை அறிவித்துள்ளார்.
இதனிடையே அரசியலமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் கொழும்பில் போராட்டங்கள், பேரணிகள் நடைபெற்று வருகின்றன.
அரசதரப்பு மேர்வின் சில்வா தலைமையில் பேரணியை நடத்துகிறது. எதிரணியினர் மாகாணசபை உறுப்பினர் சிறிலால் லக்திலக தலைமையில் பேரணி நடத்துகின்றனர்.
இந்தப் பேரணிகளால் இன்று காலை தொடக்கம் கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளிலும் வாகனப் க்குவரத்துகள் முடங்கிப் போயுள்ளன.