கடவுளே நீ வெறும் கல் தானா ?
-
இவ் விடயம் 22. 04. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 2:45க்கு பதிவு செய்யப்பட்டது
- கட்டுரைகள்
பகட்டான கோயில் அமைத்தோமே -நாம்
பங்கரில் வாழ்வது தெரியவில்லையா
பொங்கலும் படையலும் படைத்தோமே – இன்று
பொங்கும் எம்கண்ணீர் தெரியவில்லையா
பாலால் அபிஷேகம் செய்தோமே -குழந்தை
பாலுக்காய் தவிப்பது தெரியவில்லையா
பண்டிகையும் திருவிழாவும் செய்தோமே -நாம்
குண்டினால் சாவது தெரியவில்லையா
தேரில் வைத்து இழுத்தோமே -நாம்
தெருவில் நிற்பது தெரியவில்லையா
பன்னீரால் தீர்த்தம் கொடுத்தோமே -நாம்
செந்நீரில் தோய்வது தெரியவில்லையா
பூங்காவனத் திருவிழா செய்தோமே – இன்று
தூங்காத எம்துயர் தெரியவில்லையா
நமசிவாய என்று துதித்தோமே – காற்றில்
நச்சுவாயு வருவது தெரியவில்லையா
மேளமும் தாளமும் இசைத்தோமே -இன்று
மரணஓலம் இசைப்பது தெரியவில்லையா
கண்மூடி நீயும் இருப்பதேனோ -வெறும்
கல்லன்றி வேறில்லை என்பதாலோ