விடுதலைப் புலிகளின் 5 தளபதிகளுக்கும், அரசியல் ஆலோசகருக்கும் இறுதி எச்சரிக்கை!

ellalan-20130101-1விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ‘களையெடுக்கும்’ பிரிவான எல்லாளன் படை, அடுத்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஏற்கனவே விடுதலைப் புலிகள் நெடியவன் அணி நட்சத்திர தளபதி பரிதி பிரான்சில் கொல்லப்பட்ட நிலையில், விடுதலைப் புலிகள் நெடியவன் அணியின் 5 தளபதிகளுக்கும், அரசியல் ஆலோசகருக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“ஒற்றுமையாகுங்கள் அல்லது ஒதுங்கி வழிவிடுங்கள்! இறுதி எச்சரிக்கை!!” என்ற தலைப்பில் இந்த எச்சரிக்கை, எல்லாளன் படையின் நடவடிக்கைப் பொறுப்பாளர் த.மணியரசனின் பெயரில் வெளியாகியுள்ளது.

அந்த அறிக்கையில், “விடுதலைப் புலிகளின் வெவ்வேறு பிரிவுகளை கடந்த டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஒரு ஒற்றுமைக்குள் வருமாறு நாம் கேட்டிருந்தோம். இதற்கான பதிலை ஒரு சில பிரிவுகள் எமக்கு ஆக்க பூர்வமாக தெரிவித்திருந்தனர். ஆனால், விடுதலைப் புலிகள் நெடியவன் அணியின் ‘அனைத்துலக கட்டமைப்பு’, தாமே விடுதலைப் புலிகள் என அறிவித்துள்ளதாகவும், தனித்து செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் அறிகிறோம்.

இதனால் நாம், இவர்களுக்கு எதிரான முழு நடவடிக்கையை ஆரம்பிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளோம்.

இதன் முதல் கட்டமாக தன்னை விடுதலைப் புலிகளின் ஒருங்கிணைப்பாளர் என கூறிக்கொள்ளும் இரும்பொறை, குழப்பங்களின் காரணியாக கருதப்படும் குட்டி என்கிற விடுதலை, நிதிப்பொறுப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்தி உள்ள ஈரோஸ் முரளி, ரூட் ரவி, தனம் ஆகிய ஐவரையும், ஆலோசகராக இருந்து குழப்பங்களை விளைவிக்கும் தமிழ்நெட் ஜெயச்சந்திரனையும் தேசியச் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மாவீரர்களின் தியாகத்தில் நின்று விடுதலையை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களை நாம் தண்டிக்க தயங்க போவதில்லை. 2013-ம் ஆண்டு இலங்கை அரசுக்கும், தமிழீழ மக்களுக்கும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கும் புதிய செய்தியைக் கொடுக்கும் ஆண்டாக அமையும்!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்குமுன் இந்த எல்லாளன் படை இறுதி எச்சரிக்கை விடுத்த அனைவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் நெடியவன் அணியின் தகவல் தொடர்பாளர் ஆதித்தன் மாஸ்டரை தொடர்பு கொண்டபோது, “எமது அனைத்து தளபதிகளுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்படும். இந்த விஷயத்தில் விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு தலைவர் நெடியவன் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறார்.

நாமும் விடுதலைப் புலிகள், அவர்களும் விடுதலைப் புலிகள் என்பதால், அவர்கள் எப்படி செயல்படுவார்கள் என்பது எமக்கு நன்றாகவே தெரியும். அதை முறியடிப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

://viruvirupu.com/2013/01/01/42745/

 

Copyright © 2004 - 2013 நெருடல். All rights reserved.