சரத் பொன்சேகாவே, லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்தார் -மஹிந்த

makind koopamஇலங்கையின் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்தது முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவே என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்று தடவைகளுக்கு மேல் தெரிவித்துள்ளதாக இலங்கையின் ஊடகவியலாளர் குறிப்பிட்டுள்ளார்

லண்டனில் அடைக்கலம் பெற்றுள்ள ஊடகவியலாளர் உவிந்து குருகுலசூரிய இதனை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவே, லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்று தடவைகளுக்கு மேல், லசந்த விக்கிரமதுங்கவின் சகோதரர் லால் விக்கிரமதுங்கவிடம் தெரிவித்துள்ளதாக உவிந்து குறிப்பிட்டுள்ளார்.

நவநீதம்பிள்ளை, லண்டன் பொருளாதார மற்றும் அரசியல் விஞ்ஞான பாடசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை விரிவுரை ஒன்றை நடத்தினார்.

இதன்பின்னரே இலங்கையின் ஊடகவியலாளர் உவிந்து, நவநீதம்பிள்ளையிடம், லசந்த விக்கிரமதுங்கவின் கொலை பற்றி குறிப்பிட்டார்.

இது தொடர்பில் விசாரணை நடத்தவேண்டும் என்று லால் விக்கிரமதுங்கவின் கோரிக்கை கடிதத்தை உவிந்து குருகுலசூரிய, நவநீதம்பிள்ளையிடம் கையளித்தார்.

இதேவேளை சரத் பொன்சேகாவே, லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்திருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் தம்முடன் இடம்பெற்ற நேர்காணலில் குறிப்பிட்டதாக உவிந்து தெரிவித்தார்.

இராணுவ வீரர்கள் நால்வரே இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவை தவிர்த்து சரத் பொன்சேகா இந்த கொலை தீர்மானத்தை தனித்து எடுத்திருக்கமாட்டார் என்றும் ரணில் விக்கிரமசிங்க தமது நேர்காணலின் போது தெரிவித்ததாக உவிந்து சுட்டிக்காட்டியுள்ளார்

லசந்த விக்கிரமதுங்க, 2009 ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி கொல்லப்பட்டார்.

Copyright © 2004 - 2013 நெருடல். All rights reserved.