40 முன்னாள் புலி உறுப்பினர்கள் நேற்று வவுனியாவில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளனர்
- தாயக, இலங்கைச் செய்திகள்| 18. 02. 2013, திங்கட்கிழமை, தமிழீழ நேரம் 7:21
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட மேலும் 40 முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் நேற்று வவுனியாவில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் வவுனியா – மருதமடு புனர்வாழ்வு நிலையத்தில் ஒரு வருட பயிற்சியைப் பூர்த்தி செய்த போராளிகளே இன்று பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இறுதிக்கட்ட யுத்தத்தில் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை சமூகமயப்படுத்தப்படும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
தற்போது புனர்வாழ்வு நிலையங்களில் சுமார் 360 முன்னாள் போராளிகள் மாத்திரமே பயிற்சி பெற்று வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கான பயிற்சி காலம் நிறைவு பெற்றதும் குடும்பத்தினருடன் இணைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அரசாங்கம் ஏற்கனவே பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

