வன்னியில் இன்று நடப்பது இறுதித் தாக்குதல்-இதுவரை பல ஆயிரம் மக்கள் பலி

smoke_outவன்னிக் களமுனையில் இன்று அதிகாலை முதல் மூண்டுள்ள மோதல்களால் வன்னிப்பகுதி பெரும் அவலங்களைச் சந்தித்துள்ளதாக எமது விசேட செய்தியாளர் தெரிவிக்கிறார்.

அதிகாலை முதல் படைநடவடிக்கைகளை படைத்தரப்பு ஆரம்பித்துள்ளது. 6க்கும் அதிகமான முனைகளில் விடுதலைப்புலிகளுக்கும் படையினருக்கும் இடையே தற்சமயம் வரை கடும் மோதல்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 ஆகக்குறைந்தது இதுவரை பல ஆயிரம் மக்கள் உயிரிழந்திருப்பதாகவும், பல மடங்குகளால் மக்கள் படுகாயமடைந்திருப்பதாகவும் எமக்கு தெரியவந்துள்ளது.
 
அதிகாலை முதல் மக்கள் பதுங்குகுழிக்குள்ளேயே பதுங்கியுள்ளனர். வெளியே தலை காட்ட முடியாத அளவுக்கு மோசமான எறிகணை விமானத் தாக்குதல்கள் இடம்பெறுகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பொஸ்பரஸ் வகையினைச் சேர்ந்த ரசாயன ஆயுதங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால் பல பகுதிகளும் தீப்பற்றி எரிந்த வண்ணம் இருப்பதாகவும்  செய்தியார் தெரிவிக்கிறார்.
 
யுத்த களத்தில் இரு தரப்புகளுக்கிடையேயும் மோதல்கள் இடம்பெறுவதாகவும் இரு தரப்புகளுக்கும் இடைப்பட்ட ஆகக் கூடிய தூரம் 300 மீற்றருக்கும் குறைவாகவே இருப்பதாகவும் களமுனைத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
 
இதனிடையே இலங்கை ராணுவத்தின் 58 மற்றும் 59வது படைப்பிரிவுகள் இணைந்து கொள்வதற்கு சுமார் ஒன்றரைக் கிலோ மீற்றர் தூரமே இருப்பதாக கொழும்பில் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையை இறுதிக் காலக்கெடுவாக விதித்திருப்பதுடன் பொதுமக்களை தாங்கள் ஞாயிற்றுக்கிழமைக்குள் மீட்க முடியும் எனவும் படைத்தரப்பு தெரிவித்திருப்பதாகவும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
ஆயினும் வழமைக்கு மாறாக கடும் சமர் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவே தெரிய வருகின்றது. 6க்கும் அதிகமான முனைகளில் படையினரின் முன்னேற்ற முயற்சிகள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டிருப்பதாகவும் எனினும் படைத்தரப்பு உச்ச ஆயுத பிரயோகத்தினை மேற்கொண்டு முன்னேற முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
இப்பகுதியிலேயே 1 லட்சத்திற்கும் அதிகமான மக்களும் விடுதலைப் புலிகளும் சிக்குண்டுள்ள நிலையில் உரிழப்புப் பேரவலம் நினைத்துப் பார்;க்க முடியாத அளவுக்கு எல்லைத் தாண்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
மக்கள், உயிரிழந்தவர் எவர் எஞ்சியிருப்பவர் எவர் என கண்டறிய முடியாத வகையில் இப்பகுதியில் விமானத் தாக்குதல்களும் எறிகணைத் தாக்குதல்களும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. பொஸ்பரஸ் ரக வெடி பொருட்களால் அப்பகுதியின் பல பகுதிகள் எரியுண்ட வண்ணமே இருப்பதாகவும் பெரும் புகார் மண்டலமே அந்தப் பகுதிகளில் நிலவுவதாகவும் அங்கிருந்து எமக்கு கிடைக்கின்ற செய்திகள் கூறுகின்றன.
 
எனினும் விடுதலைப் புலிகள் எதிர்ச்சமர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. அடுத்து வரும் தினங்களில் பாரியளவில் சொல்லிக் கொள்ளத்தக்க அளவில் எந்தவொரு செய்தியும் வெளிவரலாம் எனவே இருதரப்பும் எதிர்பார்க்கின்றன.
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.