சிங்கள அரசின் உலகை ஏமாற்றும் அறிவிப்புகள் எமக்குப் பழகிப் போய் விட்டது – மீனவர்களின் ஆதங்கக் கருத்து
-
இவ் விடயம் 22. 06. 2009, (சனி),
தமிழீழ நேரம் 1:45க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
யாழ்க்குடாநாட்டில் மீன் பிடிப்பதற்கென மீனவர்களுக்கென கடந்த 3 வருடங்களாக அமுலில் இருக்கும் பாஸ் நடைமுறைகளில் எந்தவிதமான தளர்வும் காட்டப்பட மாட்டாது என படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
அண்மையில் யாழ்க்குடாநாட்டில் 24 மணிநேர மீன்பிடி தொடர்பான அறிவித்தல் ஒன்றை அரசின் உயர் மட்டம் விடுத்திருந்த போதிலும் இன்று இது தொடர்பாக பல பகுதிகளிலும் உள்ள மீனவர்களை படைத்தரப்பு அழைத்து கூட்டங்களை நடத்தியுள்ளனர்.
இதன் பிரகாரம் தற்போது நடைமுறையிலுள்ள பாஸ் நடைமுறைகளின் அடிப்படையிலேயெ மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல வேண்டும் எனவும் படையினரின் தளங்கள் அமைந்திருக்கும் உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் மீன் பிடிக்க தொடர்ந்தும் தடை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களின் படையினரின் பாஸ் அனுமதியுடன் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட துறைமுகங்கள் ஊடாகவே தொழிலுக்குச் செல்ல வேண்டும். இரவு வேளைகளில் தொழிலுக்குச் செல்பவர்கள் விடிந்த பின்னரேயே கரை திரும்பலாம் எனவும் அதேபோன்றே இருட்டுவதற்கு முன்பேயே தொழிலுக்குச் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பகல்வேளை மீன்பிடியில் கட்டு;ப்பாடுகள் எதுவும் இல்லை எனச் தெரிவிக்கப்பட்ட போதிலும் சோதனைச் சாவடி பாஸ் நடைமுறை என்பன தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் இருட்டுவதற்கு முன்பே துறைமுகங்கள் ஊடாக கடலுக்குச் செல்ல வேண்டும் எனவும் பின்பு விடிந்த பின்னரேயே கரைக்குத் திரும்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிடிக்கப்பட்ட மீன்களும் சோதனை நடவடிக்கைக்குட்படுத்தப்பட்ட பின்னரேயே உள்ளுக்கு வர அனுமதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
படைத்தரப்பின் அறிவுறுத்தல் தொடர்பில் ஆரோக்கியமான பிரச்சாரங்கள் தெற்கில் மேற்கொள்ளப்பட்ட போதிலும் குடாநாட்டில் தாம் தொடந்தும்; ஆர்வமோ அக்கறையோ அற்ற நிலையிலேயே வாழ்வதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். காலம் காலமாக கொழும்பு அரசாங்கங்கள் இப்படியான பம்மாத்து அறிவிப்புக்களை வெளியிடுவதும் பின்னர் அவை உப்புச் சப்பற்றுப் போவதும் தமக்கு பழக்கமாகிப் போனதென பிரதேச மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.