கப்பல் மூலம் உதவிகளை அனுப்ப அனுசரணை வழங்குமாறு அவுஸ்திரேலிய அரசிடம் கோரிக்கை – விக்டோரிய மாநில அமைச்சர் ஜெனி மிக்கக்கோஸ்

australia-flagபோரின் உக்கிரத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அடிப்படை வசதிகள் ஏதுமற்று முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்கும் வகையில் உணவு, மருந்து மற்றும் அடிப்படை தேவைகளுக்கான பொருட்கள் அடங்கிய கப்பல் ஒன்றை சிறிலங்காவுக்கு அனுப்பி வைப்பதற்கு அனுசரணை வழங்கும்படி அவுஸ்திரேலிய அரசினை அந்நாட்டின் விக்டோரிய மாநில அமைச்சரும் விக்டோரிய மாநில திட்டமிடல் துறையின் செயலருமான ஜெனி மிக்கக்கோஸ் கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித்திற்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

உலகில் இன்றைய நாளில் பார்க்கப்படுகின்ற மிகப் பயங்கரமான மனிதப் பேரவலமாக இலங்கையில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரத்தினை கூறலாம். அவ்வளவுக்கு மோசமான நிலைமையை இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ளார்கள். அவர்களின் இந்த நிலைமையை உலகின் சகல ஊடகங்களும் மனிதாபிமான தொண்டு நிறுவனங்களும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளன.

ஆகவே, அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நிலையில் பாரிய மனிதப் பேரவலத்தினை எதிர்நோக்கியுள்ள அந்த மக்களுக்கு உதவுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். அந்த மக்களுக்கு தேவையான உதவிகள் அடங்கிய கப்பல்கள் அங்கு இலங்கைக்கு சென்று அரச சார்பற்ற அமைப்புக்களின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் நேரடியாக சென்றடைவதை உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதற்கு அவுஸ்திரேலிய அரசு நல்க வேண்டும்.

அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக அங்கு செல்லும் அனைத்துலக தொண்டு அமைப்புக்களின் பிரதிநிதிகள், அந்த மக்களை நேரடியாக சென்று பார்வையிட்டு உதவிகளை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தினை அவுஸ்திரேலிய அரசு கோரவேண்டும்.

அங்கு மனித உரிமைகள் மீறல் சம்பவங்கள் நடைபெறுகின்றனவா என்பதனை சுதந்திரமாக விசாரணை செய்வதற்கு மனித உரிமைகள் அமைப்புக்கள் மற்றும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கவேண்டும் என்றும் சிறிலங்கா அரசை அவுஸ்திரேலிய அரசு கோர வேண்டும் என்றார் அவர்.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.