யுத்தத்தில் உயிரிழந்த தன்னார்வ தமிழர் புனர்வாழ்வு தொண்டர்களுக்கு அஞ்சலி – வதைமுகாம்களில் அல்லலுறும் மக்களுக்கு மனிதாபிமான உதவி – அவுஸ்திரேலிய தமிழர் புனர்வாழ்வு கழகம்
-
இவ் விடயம் 26. 06. 2009, (சனி),
தமிழீழ நேரம் 15:53க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அவுஸ்திரேலியா கிளை யுத்தத்தில் உயிரிழந்த தமது தொண்டர்களுக்கு அஞ்சலியை தெரிவித்தும், வதைமுகாம்களில் அல்லலுறும் மக்களுக்கு மனிதாபிமான உதவி வேண்டியும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இந்த வருடத்தில் தாயகத்தில் நிகழ்ந்த யுத்த அனர்த்ததில்,வெளிக்கள மனிதாபிமான தொண்டுகளை செய்துவந்த ஆயிரக்கணக்கான தமிழர் புனர்வாழ்வு கழக தொண்டர்களில் நூற்றுக்கணக்கான தன்னார்வ தொண்டர்கள் உயிரிழந்துள்ளனர்.
தாயக உறவுகளுக்காய் தம் உயிர்களை ஈந்த அந்த தொண்டர்களுக்கு அவுஸ்திரேலிய தமிழர் புனர்வாழ்வு கழகம் தன் கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறது.
அத்தோடு மட்டும் நில்லாது, தற்போது வவுனியா வதை முகாம்களில் அல்லலுறும் மக்களின் துயரினைப்போக்க ஆவன செய்யவும் அவுஸ்திரேலிய புனர்வாழ்வுகழகம் உணர்வு பூர்வமாக தன் செயற்பாடுகளை செய்ய முன்வந்துள்ளது.
அதன் ஒரு கட்டமாக அவுஸ்திரேலிய உதவும் நிறுவனக்களின் உதவிகளின் ஊடாக ஏற்கனவே உதவும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய உதவும் பணிகளில் குழந்தைகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் முக்கியம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கென பிரத்தியேக கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவிலும், பிற நாடுகளிலும் உள்ள அரச சார்பற்ற நிறுவனக்களுடனான புரிந்துணர்வின் அடிப்படையில், மேலும் பல வழிகளில் உதவும் பணிகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும்.
எனவே அவசரகால நிலை உணர்ந்து உதவிய உள்ளங்களின் உதவிகள் தற்போது அவலப்படும் மக்களை சென்றடையும் வண்ணம் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவிட்டதாகவும், தேவை ஏற்படும் பட்சத்தில் மேலும் பல உதவிகளை செய்ய உதவும் உள்ளங்கள் தயாராக இருப்பதாகவும் அவுஸ்திரேலிய தமிழர் புனர்வாழ்வு கழகம் தெரிவித்துள்ளது.