கருணா அணியில் இருந்து 900 பேர் சிறிலங்கா இராணுவத்துடன் இணைவு
-
இவ் விடயம் 29. 06. 2009, (புதன்),
தமிழீழ நேரம் 17:48க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயக மூர்த்தி முரளீதரன் (கருணா) அணியில் இருந்து, 900 வரையிலான இளைஞர்கள் இது வரை இராணுவத்தினருடன் இணைந்துள்ளதாக தெரியவருகிறது. இவர்களில் 600 பேர் முழுமையாக இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் எனவும் ஏனையோர் இராணுவத்தில் இருந்தாலும் தற்போது அவர்கள் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், கருணா தெரிவித்துள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகாவை சந்தித்து உரையாடிய போது தமிழ் இராணுவ கட்டமைப்பு திட்டமொன்றை உருவாக்குவது பற்றி கலந்துரையாடியதாகவும், பாரபட்சமற்ற பாதுகாப்பு படை செயல்படுவதற்கு இது வாய்ப்பாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இராணுவத்தில் இணைந்த இவ் கிழக்கு மாகாண இளைஞர்கள் 900 பேரும் கிழக்கு மாகாணத்திலேயே செயலாற்றுவார்கள் எனவும் கிழக்கு மாகாண இராணுவ தளங்களிலேயே பணியாற்றுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசின் புதிய இராணுவ சட்ட மூலத்துக்கு ஐ.தே.க எதிர்ப்பு
இதேவேளை சிறிலங்கா அரசினால் கொண்டு வரப்பட்ட கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவிக்கான சட்டமூலத்தினால் எதிர்காலத்தில் பிரச்சினைகள் உருவாகலாம் என ஐ.தே.க தெரிவித்துள்ளது.
படையினரை மேலும் பலப்படுத்தி நவீனமயப்படுத்தும் 10 வருட திட்டத்தின் ஒரு பகுதியாகவே பாதுகாப்பு தலைமை அதிகாரப்பதவி தற்போது சட்டமூலமாக்கபப்ட்டிருப்பதாகவும் இதன் படி ஜனாதிபதிக்கு அடுத்ததாக அதிகளவு அதிகாரங்களை கொண்டவராக அவர் இவர் இருப்பார் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.