விசாரணைக்காக தேசியத்தலைவரின் பெற்றோர் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்
-
இவ் விடயம் 01. 07. 2009, (புதன்),
தமிழீழ நேரம் 4:43க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெற்றோர் கடந்த வாரம் சிறீலங்கா பாதுகாப்பு தரப்பினரின் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று இராணுவத்தின் மூத்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவ்வதிகாரி மேலும் கூறியதாவது: வவுனியா “நலன்புரி முகாமில்” தங்கியிருந்த நிலையில் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை (வயது 76) மற்றும் அவரது மனைவி வேலுப்பிள்ளை பார்வதி (வயது 71)ஆகிய இவ்விருவரும் கடந்த மாதம் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டனர்.
புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்திலிருந்து இரகசியமான முறையில் தப்பி வந்துள்ள இவர்கள் வவுனியாவிலுள்ள “நலன்புரி நிலையத்தில்” தங்கியிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை எடுக்கவே இவ்வாறு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவ்விருவரும் தற்போது பாதுகாப்பான இடத்தில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
உரிய விசாரணைகளின் பின்னர் எவ்வாறான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து பாதுகாப்பு தரப்பினரால் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.