மருத்துவர் சத்தியமூர்த்தி மீது குற்றப் புலனாய்வுத்துறையினர் விசாரணை: நீதிமன்றத்தில் தகவல்
-
இவ் விடயம் 02. 07. 2009, (சனி),
தமிழீழ நேரம் 19:59க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
கிளிநொச்சி மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தியை தாம் விசாரணைக்கு உட்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ள குற்றப் புலனாய்வுத்துறையினர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்புபட்டிருப்பதாக கொழும்பு பிரதம நீதவானிடம் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்களான த.சத்தியமூர்த்தி, கே.துரைநாதன் மற்றும் மருத்துவத் தாதியான ஆறுமுகம் ஜெயலக்ஷ்மி ஆகியோர் மீது தாம் மேற்கொண்டுள்ள விசாரணைகள் தொடர்பான அறிக்கை ஒன்றை கொழும்பு நீதவானிடம் குற்றப் புலனாய்வுத்துறையினர் சமர்ப்பித்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் பகுதி மீது சிறிலங்காப் படையினர் நடத்திய இறுதிக்கட்டத் தாக்குதலின் போது அங்கிருந்து இடம்பெயர்ந்து வவுனியா வந்தபோது இவர்கள் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
மருத்துவர் த.சத்தியமூர்த்தி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இடம்பெயர்ந்து செல்லும் போது மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் தனது கொண்டுசென்று விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்குப் பயன்படுத்தியதாக குற்றப் புலனாய்வுத்துறையினர் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி பகுதியில் பிறந்தவரான மருத்துவர் த.சத்தியமூர்த்தி, பின்னர் கிளிநொச்சி சென்று வசித்ததாகத் தெரிவித்த குற்றப்புலனாய்வுத்துறையினர், அவர் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் கல்வி கற்று பட்டம் பெற்றதாகத் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் மூவரையும் ஜூலை 17 ஆம் நாள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத்துறையினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.