வணங்காமண் நிவாரணம் 8ஆம் திகதி கொழும்பு வரும்
-
இவ் விடயம் 04. 07. 2009, (சனி),
தமிழீழ நேரம் 1:34க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
ஐரோப்பிய மக்களால் வன்னி மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் எதிர்வரும் 8ஆம் திகதி சென்னை துறைமுகத்திலிருந்து பிறிதொரு கப்பல் மூலம் கொழும்பை வந்தடையவுள்ளது.
இந்த பொருட்களை ஏற்றி வந்த வணங்கா மண் எனும் கப்பல் முதலில் இலங்கை நோக்கிச் சென்ற போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுவரப்பட்ட நிவாரணப் பொருட்களை இறக்குவதற்கு அந்நாட்டு அரசு அனுமதிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து கலைஞர் மேற்கொண்ட முயற்சியின் பலனாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி அப்பொருட்களை ஏற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசை இணங்க வைத்தது. அதேவேளை வணங்காமண் கொண்டு வந்த பொருட்களை இந்திய கப்பலில் தான் அனுப்பி வைக்க வேண்டும் என்று இலங்கை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதனை ஏற்று வணங்காமண் கப்பல் சென்னை துறைமுகத்திற்குள்வர அனுமதிக்கப்பட்டது. அதிலுள்ள பொருட்களை இறக்கும் பணி இன்று காலை ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இதனையடுத்து இக்கப்பலிலிருந்த பொருட்களை சென்னை துறைமுகத்தில் வைத்து ஏற்றிக்கொண்டு இந்தியாவின் கொலரா எனும் கப்பல் எதிர்வரும் 6ஆம் திகதி கொழும்பு நோக்கிப் புறப்படவுள்ளது. பின்னர் 8ஆம் திகதி அக்கப்பல் கொழும்பு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதைத் தொடர்ந்து ஐசோப்பிய மக்களால் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.